பாதுகாப்பு அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முற்பகல் பாதுகாப்பு அமைச்சு கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
சிவில் பாதுகாப்பு திணைக்களம், மாணவர் படையணி, தேசிய பாதுகாப்பு கல்வி நிறுவனம், ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம், கரையோர பாதுகாப்பு திணைக்களம், ரக்ன லங்கா நிறுவனம் உள்ளிட்ட அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
கடலோர பாதுகாப்பு சேவையில் இருந்து ரக்ன லங்கா மற்றும் லங்கா லொஜிஸ்டிக் நிறுவனங்களை நீக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ள அதேவேளை பாதுகாப்பு படையினருக்காக காணி வழங்குதல் தொடர்பாக விசேட கவனம் செலுத்தவும் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
ரக்ன லங்கா நிறுவனத்தை கலைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஓய்வுபெற்ற படையினரின் நலன்களுக்காக அந்த நிறுவனத்தை தொடர்ந்தும் நடத்துவது தொடர்பில் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி மற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதானி உள்ளிட்ட முப்படைத் தளபதிகளும் தொடர்புடைய நிறுவன தலைவர்களும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.