எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெமட்டகஹகந்த பகுதியில் உள்ள காணி ஒன்றில் அமைந்துள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து ஆணொருவர் நேற்று வியாழக்கிழமை (06) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
தெமட்டகஹகந்த, நவதகல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
தெமட்டகஹகந்த, நவதகல பகுதியைச் சேர்ந்த நபரொருவர் கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக எல்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்,காணாமல்போன நபர் காணி ஒன்றில் அமைந்துள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் காணியின் உரிமையாளரிடம் விசாரணை நடத்திய போது, சடலமாக மீட்கப்பட்டவர் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்ததாகவும், காணியின் உரிமையாளர் மற்றுமொரு நபருடன் இணைந்து சடலத்தை கிணற்றில் வீசியதாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, காணியின் உரிமையாளர் உட்பட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தெமட்டகஹகந்த பிரதேசத்தை சேர்ந்த 38 மற்றும் 46 வயதுடையவர்கள் ஆவர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

