இரணைதீவு செல்வதற்கான போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது

305 0
கிளிநொச்சி பூநகரியின் இரணைதீவு மக்கள் தமது பூர்வீக இடத்திற்குச் செல்லவும் தங்கி நின்று தொழில் புரியவும் அனுமதிக்குமாறு மூன்றாவது நாளாகிய இன்று 2017.05.03 உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1992ம் ஆண்டு இரணைதீவில் இருந்து இடம் பெயர்ந்த குடும்பங்கள் முழங்காவில் இரணைமாதா நகரில் வாழ்ந்து வருகின்றனர். 2009ம் ஆண்டின் பின்னர் தமது பூர்வீக நிலமான இரணைதீவிற்குச் செல்ல வேண்டும் என மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கிராம மட்டத்திலும் பூநகரிப் பிரதேச செயலகம், கிளிநொச்சி மாவட்டச் செயலகம் என்பவற்றில் நடைபெற்ற கூட்டங்களில் தம்;மை தமது பூர்வீக நிலத்திற்குச் செல்வதற்கு அனுமதிக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இணைத் தலைவர்கள் இரணைதீவிற்குச் செல்வது என முடிவுகள் எடுக்கப்பட்டன. இதற்கு கடற்படை அனுமதிக்க இல்லை எனவும் காரணம் கூறப்பட்டது.
 சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இரணைத்திவுக்கு சென்று வந்த பின்னர் தெரிவித்தார் சில வாரங்களில் மக்கள் இரணைத்தீவுக்குச் செல்லலாம் என ஆனால் எதுவும் நடக்கவில்லை. அ;ததோடு சில அரசியல்வாதிகளும் இரணைதீவிற்குச் சென்று வந்தனர்.
மக்களை இரணைதீவிற்குச் செல்வதற்கான அனுமதியினையும் பெற்றுத் தருவோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர். எவையும் நடைபெறாத நிலையில் மே நாளான அன்று இரணைதீவு மக்கள் இரணைமாதா நகரில் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். 336 குடும்பங்கள் இரணைதீவிற்குச் செல்வதற்கான விருப்பங்களை பூநகரிப் பிரதேச செயலரிடமும் கிளிநொச்சி மாவட்டச் செயலரிடமும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் ஏற்கனவே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.