ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் ஆர்ப்பாட்டம்

250 0

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாகவும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், வடமாகாண சபையின் எதிர் கட்சித்தலைவர் சி .தவராசா, மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட ஊடகவியாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாளர்கள் மற்றும் காணாமல் போன ஊடவியாளர்கள் தொடர்பில் நீதி வழங்க கோரியும், அதற்கு தற்கால நல்லிணக்க அரசாங்கம் அதற்கான கவனம் செலுத்த வேண்டும் என்றும் இதன்பொது கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதேவேளை சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடவியாலாளர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட கவனயீர்ப்பு போராட்டம் இன்று மட்டக்களப்பு நகரில் மேற்கொள்ளப்பட்டது.

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊடகவியலாளர்களுக்கான ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடவியாலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஷ்ணகுமார் தலைமையில் இது நடைபெற்றது .

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளும் கலந்துகொண்டனர்.

நல்லாட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு ஓரளவு சுதந்திரம் உள்ள போதிலும் இதுவரையில் தாங்கள் முழுமையாக சுதந்திரமாக கடமையாற்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படவில்லையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடவியாலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.