கோடநாடு சம்பவம்: சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் தான் பல உண்மைகள் வெளிவரு

242 0

கோடநாடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் தான் பல உண்மைகள் வெளிவரும் என்று திருமாவளவன் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசை விமர்சிப்பதோ, குற்றம் சொல்வதோ எங்களது நோக்கம் அல்ல. மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும் மக்களுக்கு சொல்ல வேண்டியது எங்கள் கடமை.

வலிமை மிக்க இடத்தில் அமர்ந்து உள்ளதால் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் பாரதிய ஜனதா அரசு எப்படி செயல்படுகிறது என்பதை உற்று கவனிக்கிறோம். தமிழகத்திலும் அக்கட்சி தனது ஆக்டோபஸ் கால்களை பரப்ப முயற்சி செய்கிறார்கள். இது அக்கட்சியின் செயல்திட்டங்களில் ஒன்று. இதை குற்றமாக சொல்லவில்லை. மக்களுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் எச்சரிக்கையாக சொல்ல வேண்டியதாக உள்ளது.

தமிழகத்தில் மதவாத அமைப்புகளுக்கு இடம் தந்துவிடும் என்ற அச்சம் காரணமாக தெரிவிக்கிறோம். இது யூகங்களிலான விமர்சனங்கள் அல்ல. மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் விரைவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் என கூறி வருகிறார். இந்த கருத்து நாங்கள் சொல்வதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.

ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் காவலாளி கொலை செய்யப்பட்டது மற்றும் அதை தொடர்ந்து நடந்து வரும் சம்பவங்கள் பல்வேறு யூகங்களுக்கு வழிவகை செய்யப்படுகிறது. சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் தான் பல உண்மைகள் வெளிவரும். தமிழக போலீசாரின் விசாரணை உண்மையை கொண்டு வராது.இவ்வாறு அவர் கூறினார்.