ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் நபர்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்மானங்களை எடுக்காது. அந்த வகையில் பரந்துபட்ட கூட்டணியமைப்பதற்கான எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை (13) இரவு கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கட்சியின் உள்ளக செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன் போது எடுக்கப்பட்ட சகல தீர்மானங்களையும் இனிவரும் காலங்களில் நாட்டுக்கு தெரியப்படுத்துவோம்.
ஐக்கிய தேசிய கட்சியுடன் மாத்திரமின்றி, சகல முற்போக்கு அரசியல் தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம்.
எந்தவொரு தரப்புடனும் இணைவது அல்லது பிரிவது என்பது கொள்கை ரீதியான காரணிகளின் அடிப்படையிலேயே அமையும். அதன் அடிப்படையிலேயே அரசியலிலுள்ள சகலருடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கின்றோம். எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சிக்குள் மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல.
அதேபோன்று நபர்களை அடிப்படையாகக் கொண்டு நாம் அரசியல் தீர்மானங்களை எடுப்பதில்லை. எமது தீர்மானங்கள் அனைத்தும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டதாகவே அமையும்.
இந்த நிலைப்பாட்டில் நாம் ஸ்திரமாகவுள்ளோம். நாம் முன்னர் செயற்பட்டதைப் போன்று ஐக்கிய மக்கள் கூட்டணியாகவே தொடர்ந்தும் முன்னோக்கிப் பயணிப்போம்.
இதன் போது கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக, மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவைத் தயாரித்தல் உள்ளிட்டவை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது என்றார்.

