அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் நிறுவனம் இலங்கைக்கு நிதி உதவியளித்ததாக வெளியாகியுள்ள செய்தி குறித்து தூதரக உள்ளக மட்டத்தில் கணக்காய்வு செய்வதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வெள்ளிக்கிழமை (14) பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்துக்கு சென்று கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, பொதுச்செயலாளர் சாகர காரியவசம் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இச்சந்திப்பு தொடர்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டதாவது,
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் எதிர்வரும் காலங்களில் சகல அரசியல் கட்சிகளின் தலைமை காரியாலயங்களுக்கும் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக குறிப்பிட்டார். அதற்கமைவாகவே எம்முடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இச்சந்திப்பின்போது பல விடயங்கள் பேசப்பட்டன. அரசாங்கங்கள் மாற்றமடையும் போது அந்த அரசாங்கங்களின் கொள்கைக்கு அமைய இராஜதந்திர மட்டத்தில் செயற்பட வேண்டிய நிலை காணப்படுவதாக தூதுவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் நிறுவனம் இலங்கைக்கு பாரிய நிதி வழங்கியுள்ளமை குறித்து வினவியபோது ‘இவ்விடயம் தொடர்பில் தூதரக மட்டத்தில் உள்ளக கணக்காய்வினை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக’ குறிப்பிட்டார்.
பிளவுப்படாத வெளிவிவகார கொள்கையை நாங்கள் பின்பற்றுகிறோம். ஆகவே அனைத்து நாடுகளுடனும் இணக்கமாகவே செயற்படுவோம். அமெரிக்க தூதுவருடன் இணக்கமாக பேச்சுவார்த்தையே இடம்பெற்றது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பாக பொதுஜன பெரமுன போராட்டத்தில் ஈடுபடவில்லை.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சரத் வீரசேகர கலந்துகொண்டார். சிவில் பிரஜை என்ற அடிப்படையில் அவர் போராட்டத்தில் கலந்துகொண்டார். கட்சி என்ற ரீதியில் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்றார்.

