தாயக உறவுகளுக்கு கரம் கொடுத்த 10 வது ஆண்டு கலைமாருதம் – தமிழ் பெண்கள் அமைப்பு – யேர்மனி

1325 0

தமிழ் பெண்கள் அமைப்பு – யேர்மனி பேர்லின் நகரில் தாயக உறவுகளுக்கு கரம் கொடுக்கும் வகையில் வருடாந்தம் “கலைமாருதம்” எனும் நிகழ்வை நடாத்தி வருகின்றனர். இவ்வருடம் 10 வது ஆண்டாக கலைமாருதம் மாபெரும் ஈழத்து நட்சத்திர விழாவாக அரங்கம் நிறைந்த மக்களுடன் மெய்சிலிர்க்க வைத்த அரங்க வடிவத்துடன் எண்ணிக்கையில் அடங்கா நிறுவனங்களின், மக்களின் முழு ஆதரவுடன் நிறைவேறியது. மாபெரும் இவ் நிகழ்வை சிறப்பித்த அனைத்து ஈழத்து கலைஞர்களுக்கும் இவ் நிகழ்வுக்கு தமது முழு ஆதரவை தந்துதவிய அனைவருக்கும் தமிழ் பெண்கள் அமைப்பு -. யேர்மனி தமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.

குறிப்பாக தூரதேசத்தில் இருந்து வருகைதந்த கலைஞர்கள் மற்றும் இவ் நிகழ்வை ஒளிப்பதிவு , ஒலிவமைப்பு, ஒளி விளைவுகள் செய்திருந்த அனைத்து நிறுவனங்களும் எவ்வித எதிர்பார்ப்புகளும் அற்று தமது முழு ஆதரவை வழங்கியிருந்தது தாயக மக்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பை பறைசாற்றியது. அதிர்ஷ்ட லாப சீட்டுகளுக்கான பரிசுப் பொருட்களை பெற்றுக்கொண்ட உறவுகள் அனைவரும் அதை தமிழ் பெண்கள் அமைப்புக்கு மீளளித்து தாயக உறவுகளுக்கு மேலும் கரம்கொடுத்தது அரங்கத்தில் மக்களின் உணர்வலைகளை தெளிவாக வெளிப்படுத்தியது. இவ் நிகழ்வின் ஒழுங்கமைப்பு மற்றும் கலைஞர்களின் திறமை பன்னாட்டு ரீதியாக சிறந்த ஒரு நிகழ்வாக அமைந்திருந்தது மட்டும் அல்ல ஈழத்து கலைஞர்களுக்கு தனித்துவமான மதிப்பளிப்பையும் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் பெண்கள் அமைப்பு – யேர்மனி