குறுகிய பேதங்களுக்கு அப்பாற்பட்டு நாட்டைக் கட்டியெழுப்பும் தேசியப் பணிக்கு ஆயத்தமாகும் அதேவேளை, வெளிப்படைத்தன்மையுடன் நாட்டுக்கும் மக்களுக்கும் பொறுப்புக்கூறக்கூடிய உன்னத சேவையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக புதன்கிழமை (01) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர்,
குறுகிய பேதங்களுக்கு அப்பாற்பட்டு நாட்டைக் கட்டியெழுப்பும் தேசியப் பணிக்கு ஆயத்தமாக வேண்டும். வெளிப்படைத்தன்மையுடன் நாட்டுக்கும் மக்களுக்கும் பொறுப்புக்கூறக்கூடிய உன்னத சேவையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசியல் தலைவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் ஒன்றிணைந்து இதனை ஒரு பொறுப்பாகவும் கடமையாகவும் கருத வேண்டும்.
சாதாரண மக்களுக்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம் உன்னத, நேரிய பயனுள்ள பொதுச் சேவையை வழங்குதல் போலவே நெறிமுறைகளைப் பேணுவதுடன், பொதுச் சொத்துக்கள் மற்றும் வளங்களை துஷ்பிரயோகம் செய்ய அனுமதிக்கக் கூடாது.
நாட்டுக்கு செயல் திறமையோடு வினைத்திறனான சேவையை ஆற்ற வேண்டும். தனிநபர் இலாபத்தை விட நாட்டு மக்களின் நலனுக்காக கூட்டாக செயற்பட ஒன்றிணைய வேண்டும் என்றார்.

