பாலம்பிட்டி அம்மன் கோவிலுக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்த சிறுவனை சமுர்த்தி உத்தியோகத்தர் தாக்கியதில் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
நேற்றைய (28) தினம் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிகொண்டிருந்த த.யதுர்சன் (15 வயது) மீது மடு பிரதேச பிரிவிற்கு உட்பட்ட பாலம்பிட்டியை சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர் சிறுவனை தாக்கியுள்ளார்.
தாக்கப்பட்டதையடுத்து சிறுவனின் தந்தை நேற்று இரவு 10 மணியளவில் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு மேற்கொண்டதையடுத்து வைத்தியசாலைக்கு சென்று சிறுவனை அனுமதிக்கும்படி சிட்டை வழங்கியதையடுத்து பெரிய பண்டிவிரிச்சான் வைத்தியசாலைக்கு தந்தையார் சிறுவனை அனுமதிக்க, இரவு 11 மணியளவில் வைத்தியசாலைக்கு சென்ற போது அங்கு வைத்தியர் இருக்கவில்லை. நாளை காலை 8 மணிக்கு பின்பு வைத்தியர் வருவார் வந்ததன் பின்னர் சிகிச்சை பெறுமாறு உதவியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இன்று (29) காலை பண்டிவிரிச்சான் வைத்தியசாலைக்கு சென்று பொலிஸாரால் கொடுக்கபட்ட படிவத்தை நிரப்பி தருமாறு கேட்டதையடுத்து வைத்தியர் தான் ஏற்கனவே விடுமுறையாகையால் நான் நிரப்பி தர முடியாது அருகில் உள்ள வைத்தியசாலைக்கு செல்லுமாறும் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் குறித்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.