ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழு, வில்பத்து பிரதேசத்துக்கு விஜயம்

245 0

அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழு, வில்பத்து பிரதேசத்துக்கு, இன்று (27) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது.

வில்பத்து விவகாரம் தொடர்பில், ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில், கடந்த 03ஆம் திகதி, ஜனாதிபதி செயலாளருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர், இவ்விஜயம் மேற்கொள்ளத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இவ்விஜயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பிரதியமைச்சர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறுக், ஜனாதிபதி செயலகத்தின் மேலதிகச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள், வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள், வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட முசலி மக்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன் முதற்கட்டமாக, முசலி பிரதேச செயலகத்தில் வில்பத்து விவகாரம் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெறவுள்‌ளது.

வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறும் நோக்கில், பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக இதன்போது விசேட அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவுள்‌ளது. அத்துடன், பாதிக்கப்பட்ட மக்கள் சார்பிலும் கருத்துகள் பரிமாறப்படவுள்ளன.

அதேபோன்று, வனப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளும் வில்பத்து விவகாரம் தொடர்பில் தங்களது நிலைப்பாடுகளைச் சபையில் தெரிவிக்கவுள்ளனர். இதன்பின்னர், வில்பத்து பிரதேசத்தில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாப்பு இடமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை ஆராயவுள்ளனர்.

அதேவேளை, அங்கு குடியிருக்கும் மக்கள் தரப்பு நியாயங்களையும் அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஊடகங்கள் வாயிலாக மட்டும் பேசப்பட்டுவந்த வில்பத்து விவகாரம், சம்பந்தப்பட்டவர்களை ஒரே மேசைக்கு அழைத்து பேசுவதன்மூலம், இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொரு நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது என்று முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இருதரப்பும் சம்பந்தப்பட்ட இடத்தில், சம்பந்தப்பட்டவர்களுடன் நேரடியாக பேசுவதன் மூலம் தீர்வுகாண்பதற்கான தடையாகவுள்ள பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றை நிவர்‌த்திப்பதற்கான சந்தர்ப்பம் இதன்போது ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.