அதிமுக தலைமை கழகத்தில் இருந்து சசிகலா படத்தை உடனே அகற்றுங்கள்: பன்னீர்செல்வம் அணி

517 0

அதிமுக தலைமை கழகத்தில் இருந்து சசிகலா படத்தை உடனே அகற்ற வேண்டும் என்று அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியினர் வலியுறுத்தியுள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக பிளவுப்பட்டதால் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்துள்ளது. அ.தி.மு.க.வுக்கு மீண்டும் இரட்டை இலை சின்னம் கிடைக்க இரு அணிகளும் ஒன்றாக இணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று மாலை அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஓ.பி.எஸ். அணியினரும், எடப்பாடி பழனிசாமி அணியினரும் பேச்சு நடத்த இருப்பதாக நேற்று முன் தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இரு அணிகளும் இன்று இணைப்பு பேச்சுவார்த்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை வெளியேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெறும் என்று ஓ.பி.எஸ். அணியின் சார்பில்
கே.பி.முனுசாமி தெரிவித்ததை அடுத்து பேச்சுவார்த்தைக்கு திடீர் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இதனையடுத்து இரு தரப்பினரும் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், அதிமுக தலைமை கழகத்தில் இருந்து சசிகலா படத்தை உடனே அகற்ற வேண்டும் என்று அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியினர் வலியுறுத்தியுள்ளனர். அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில், “சசிகலாவின் புகைப்படங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அலுவலகமான தலைமைக் கழகத்திலிருந்து உடனே அகற்றி அதன் புனிதத்தை காப்பாற்ற வேண்டும் என்று விசுவாசத் தொண்டர்களின் சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.