நுவரெலியா வசந்த கால ஏற்பாடுகளில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பில் ஆராய குழு அமைக்கவும் – ஆர்.ராஜாராம்

229 0

நுவரெலியா வசந்த கால ஏற்பாடுகளில் பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளது. மாகாணசபையில் எடுக்கப்பட்ட எந்த ஒரு தீர்மானமும் முறையாக நடைமுறைபடுத்தப்படவில்லை.எங்களுடைய மத்திய மாகாண ஆளுநரை மலர் கண்காட்சிக்கு பிரதம விருந்தினராக அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தபோதிலும் அவரிடம் முறையாக அதற்கான அழைப்பு விடுக்கப்படவில்லை.

எனவே நுவரெலியா வசந்த கால நிகழ்வுகள் தொடர்பாக ஆராய்வதற்கு குழு ஒன்றை அமைக்க மத்திய மாகாண முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாகாண சபை உறுப்பினர்  கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

மத்திய மாகாண சபையின் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையிலான மாகாண சபை குழுக்கூட்டம் நேற்று (21.04.2017) மாகாண சபையின் பலலேகலை கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது.இதில் மத்திய மாகாண சபையின் கல்விச் செயலாளர் விஜயரட்ண¸மாகாண கல்வி பணிப்பாளர் ஏக்கநாயக்க தமிழ் மொழி பிரிவின் பொறுப்பாளர் சத்தியேந்திரா உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த  மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் மாகாண சபையில் எடுக்கப்படுகின்ற பலவேறு தீர்மானங்கள் முறையாக நடைமுறைபடுத்தப்படுவது இல்லை.இதற்கு பல உதாரணங்களை கூறமுடியும்.தற்பொழுது நுவரெலியா வசந்த கால நிகழ்வகள் நடைபெற்று வருகின்றது.

வசந்த காலத்தின் பொழுது வாகன தரிப்பிடம் தொடர்பாகவும் அதற்கு பணம் அறவிடுவது மாநகர சபை ஊடாகவும் என தீர்மானிக்கப்பட்டிருந்த பொழுதிலும் அந்த நடைமுறைக்கு அப்பால் சென்று தனியார் ஒருவருக்கு அந்த பணத்தை அறவிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.இதனை யார் தீர்மானித்தர்கள் என்று தெரியவில்லை.தனிப்பட்டவர்கள் சம்பாதிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்க முடியாது.

நுவரெலியா வசந்த காலத்தின் பொழுதே அங்கிருக்கின்ற மக்களுக்கு வருமானம் கிடைக்கின்ற வகையில் கடந்த காலங்களில் மாநகர சபையின் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.ஆனால் இந்த முறை வசந்த காலத்தின பொழுது நுவரெலியாவில் இருக்கின்ற மக்களுக்கோ அல்லது  வர்த்தகர்களுக்கோ எந்தவிதமான பிரயோசனமும் இல்லை.எல்லா வருமானமும் வெளியாருக்கு சென்றிருக்கின்றது.நுவரெலியா மக்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை.

கந்தப்பளை பகுதியில் ஒரு பாடசாலைக்கு களிவறை வசதிகளை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்ட 19 இலட்ச ரூபாவில் அதற்காக வேலைத்திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை.அந்த பணம் பெறும் பகுதி எந்தவிதமான ஒரு நிபந்தனையோ எழுத்து மூல ஒப்பந்தமோ இல்லாமல் தனிப்பட்ட ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.இதனை தேடிப்பார்த்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மத்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சின் மூலம் எமக்கு அனுப்பப்படுகின்ற பணத்தை முறையாக பயன்படுத்தி அதன் பயன்களை எமது மாணவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே நேரத்தில் இன்னும் மத்திய மாகாணத்தில் பல தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் திறக்கப்படாமல் இருக்கின்றது.அதனை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.