வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் முதலில் தீர்க்கப்பட வேண்டும் – வேலையற்ற பட்டதாரிகள் (காணொளி)

214 0

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளை தீர்த்துவைத்துவிட்டு மட்டக்களப்பில் மத்திய குழு கூட்டத்தினை நடாத்துவதன் மூலமே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தனித்துவத்தை பாதுகாக்கமுடியும் என்று மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 60வது நாளாக இன்றும் தொடர்கிறது.

வடகிழக்கில் உள்ள தாம் கல்வியைப்பெறுவதில் கடந்த காலங்களில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதுடன் பட்டக்கல்வியையும் பெரும் சிரமங்களுடன் பூர்த்திசெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று தொழில்வாய்ப்பினை பெறுவதற்கு வீதியில் போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பட்டதாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் வடகிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் பட்டத்தை பூர்த்திசெய்தவுடன் தொழிலை தெரிவுசெய்வதற்கு பல்வேறு துறைகள் உள்ளன.

ஆனால் வடகிழக்கில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இப்பகுதியில் பட்டத்தை பூர்த்திசெய்வோர் அரச துறையை மட்டுமே எதிர்பார்க்கவேண்டிய நிர்க்கதிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தனியார் துறையில் கூட வேலைவாய்ப்பை வழங்குவதற்கு இன்று தயக்கம் காட்டுகின்றனர்.

அரச வேலை கிடைத்தால் தனியார் துறையை விட்டுச்சென்றுவிடுவார்கள் என்பதால் தனியார் துறைக்குள் பட்டதாரிகளை உள்ளீர்க்க தயக்கம் காட்டுகின்றனர்.

இவ்வாறான நிலையில் வடகிழக்கில் உள்ள பட்டதாரிகள் அரச தொழிலையே நம்பியிருக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு மாகாணசபைகளில் பல்வேறு வெற்றிடங்கள் உள்ளபோதிலும் அவற்றிற்குள் பட்டதாரிகளை உள்ளீர்ப்பதற்கான முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லையெனவும் பட்டதாரிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

தமிழ் மக்களுக்கான தனித்துவக்கட்சியாக இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பே எமது போராட்டத்திற்கான வெற்றியை பெற்றுத்தர வேண்டும்.

அதற்கான அழுத்தங்களை எதிர்க்கட்சி என்ற ரீதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வழங்கவேண்டும்.

அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பதனால் மட்டும் எதுவும் நிறைவேற்றப்படபோவதில்லை.

அதற்கான அழுத்தங்களை எதிர்க்கட்சி தலைவர் வழங்கவேண்டும்.

எதிர்வரும் 29ஆம் திகதி மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மத்திய குழு கூட்டம் நடைபெறுவதாக அறிகின்றோம்.

எமக்கான தீர்வை வழங்கிவிட்டு மட்டக்களப்பில் மத்திய குழு கூட்டத்தை நடாத்துவதே அவர்களுக்கான கௌரவமாக நாங்கள் கருதுகின்றோம்.

அதனை அவர்கள் செய்வார்கள் என எதிர்பார்க்கின்றோம் என்று பட்டதாரிகள் தெரிவித்தனர்.