தேயிலை, நெற்பயிர் செய்கையாளர்களுக்கு உர மானியம் – அரசாங்கம் தீர்மானம்

147 0

தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்காக தேயிலை பயிர்ச் செய்கையாளர்களுக்கும் 2024 மற்றும் 2025 பெரும்போகத்துக்கான வயல் காணிகளில் நெற்செய்கையில் ஈடுபடும்  விவசாயிகளுக்கும் உர மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்தகாலப் பகுதியில் உரத்தின் விலை அதிகரிப்பால் மற்றும் இரசாயன உரத்தடை போன்ற காரணிகளால் தேயிலைச் செய்கையில் உரப்பாவனை குறைதல் தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைவதற்கான காரணங்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதனால் தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்காக உரப்பாவனையை ஊக்குவிக்கும் நோக்கில் பயிர் செய்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவது காலத்தின் தேவையாக உள்ளது.

அதற்கமைய அரச உரக் கம்பனியான ஸ்டேட் பேர்டிலைசர் கம்பனி லிமிட்டட் மூலம் 50 கிலோகிராம் இரசாயன உரப்பை ஒன்று 4000 ரூபா மானிய விலைக்கு தேயிலை பயிர் செய்கையாளர்களுக்கு வழங்குவதற்காக விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2024ஃ25 பெரும்போகத்துக்கான வயல் காணிகளில் நெற்செய்கை மற்றும் ஏனைய பயிர்ச்செய்கை  விவசாயிகளுக்கு உர மானியத்தை வழங்குவதன் மூலம் நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், விளைச்சலை அதிகரிப்பதற்கும் இயலுமை கிடைக்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2024ஃ25 பெரும் போகத்துக்கு அரச உரக் கம்பனியான ஸ்டேட் பேர்டிலைசர் கம்பனி லிமிட்டட் மற்றும் தனியார் துறையினர் மூலம் உரத்தை இறக்குமதி செய்து விவசாயிகளுக்குப் போட்டி விலையில் விற்பனை செய்வதற்கும், நெற்செய்கை மற்றும் ஏனைய பயிர்ச்செய்கைகளில் பயிரிடப்படும் உயர்ந்தபட்சம் இரண்டு ஹெக்டேயர்களுக்கு ஹெக்டேயர் ஒன்றுக்கு 15,000 ரூபா வீதம் நிதி உதவியை கமநல சேவைகள் திணைக்களத்தின் மூலம் வழங்குவதற்கும் விவசாய மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.