தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச நீதியை பெற்றுத்தர தென்னாபிரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும்

133 0

தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கும் சர்வதேச நீதியைப் பெற்றுத்தர தென்னாபிரிக்கா நடவடிக்கை எடுக்க  வேண்டும், ஜெனிவா கூட்டத்தொடரில் இது தொடர்பான கரிசனையை வெளிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தென்னாபிரிக்க தூதுவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவர் சாண்டில் எட்வின் ஷால்க், துணைத் தூதுவர் றெனி எவர்சன் வர்ணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு இடையிலான சந்திப்பு புதன்கிழமை (21) கொழும்பிலுள்ள தென்னாபிரிக்க தூதரகத்தில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலின்போது, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களின் நிலைப்பாடு மற்றும் தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பான சாதகத் தன்மைகள் குறித்தும், ஈழத்தமிழர்கள் சார்ந்த அரசியல் முன்னெடுப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, காசாவில் நடைபெறும் மனித உரிமைமீறல்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் (ICC) வழக்குத் தாக்கல் செய்துள்ள தென்னாபிரிக்கா, ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கும் சர்வதேச நீதியைப் பெற்றுத்தர முயற்சிக்க வேண்டும் என்றும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரிலும் இவ்விடயம் சார்ந்து தங்களின் கரிசனையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், தென்னாபிரிக்கத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.