ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அதிகாரத்தை கைப்பற்றுவோம்.பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் புதிய அரசியல் கூட்டணியை ஸ்தாபிப்போம் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.
அநுராதபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பொதுஜன பெரமுனவின் அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்று குறிப்பிட்டதில் எவ்வித தவறும் கிடையாது.ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்பதை மீண்டும் குறிப்பிடுவேன். பொதுஜன பெரமுனவை நாங்கள் தான் உருவாக்கினோம்.
பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் ஜனாதிபதி பக்கம் கட்சியின் பெயர் பலகையை மாத்திரம் வைத்திருப்பதில் எவ்வித பயனுமில்லை. கட்சியின் பதவி நிலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்படும்.இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் கூட்டணி ஊடாகவே போட்டியிடுவோம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் வகையில் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை எதிர்வரும் 17 ஆம் திகதி அநுராதபுரம் சல்காது மைதானத்தில் நடத்துவோம்.எமது ஆதரவு இல்லாமல் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு அரசியல் கூட்டங்களை நடத்த முடியாது.
பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்கள். நாட்டு மக்களும் இதே நிலைப்பாட்டில் தான் உள்ளார்கள்.
ஆகவே மக்களின் அபிலாஷைகளுக்கு அமைய செயற்படுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்துகிறோம் என்றார்.

