யாழ்ப்பாணத்து விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நேற்று வெள்ளிக்கிழமை யாழ், வலம்புரி ஹோட்டலில் ‘செழிப்பான எதிர்காலத்துக்கான பயணம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இளைஞர்களுடனான சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
கொவிட் – 19 பெருந்தொற்றுப்பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடி போன்றவற்றால் கடந்த 4 வருடங்களாக இலங்கையின் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்க முடியவில்லை. இருப்பினும் தற்போது நாடு வங்குரோத்து நிலையில் இருந்து விடுபட்டிருப்பதால் அதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனால் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி நாட்டை முன்னேற்றவேண்டும்.
நிதிப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் இவ்வருடம் நிதி ஒதுக்கீடு செய்திருக்கின்றது. அதுமாத்திரமன்றி ஆசிரிய சேவையில் புதியவர்களை இணைத்துக் கொள்வதற்கு அடுத்த வருடம் மேலதிக நிதி வழங்கப்பட்டுள்ளது.
சுயதொழிலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு நிவாரணத்துடன்கூடிய கடன் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தில் இணைந்து இளைஞர்கள் முன்னோக்கிச்செல்வதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
இச்சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், இராஜாங்க அமைச்சர்களான கலாநிதி சுரேன் ராகவன், காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

