வடக்கு மாணவர்களிற்கு குற்றவியல் தொடர்பான கற்கை நெறி அறிமுகப்படுத்தவேண்டியது அவசியம் – கலாநிதி ரிச்சேட் அன்ரனி

272 0
வடக்கில் அதிகரித்து குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு மாணவர்கள் மத்தியில் குற்றவியல் தொடர்பான கற்கைநெறி அறிமுகப்படுத்தப்பட வேண்டியது கட்டாய தேவையாகும் என ஆய்வாளர் கலாநிதி ரிச்சேட் அன்ரனி தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழக சமூகவியற்துறையினரின் எற்பாட்டில் அத்துறை சார் மாணவர்களுக்கான கருத்துரை ஒன்று  யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
போருக்கு பின்னைய சூழலில் தமிழ் இளையோரின் உபபண்பாட்டு பொருண்மைகள் – ஒரு சமூகவியல் நோக்கு எனும் தலைப்பில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கருத்துரை வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
வடக்கில் போருக்கு பின்னைய காலத்தில் தமிழ் இளையோர்கள் பற்றிய  ஆய்வினை மேற்கொண்டிருந்தேன். அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இளையோரின் செயற்பாடுகளின் அடிப்படையில் சண்டியர் கலாச்சாரம், இளையோர் அரசியல் உடன்பாடு பொங்கு தமிழில் இருந்து எழுக தமிழ் வரை, தமிழ் இளைஞர்களின் சினிமா நுகர்வு கலாச்சராம், நவீனரக மோட்டார் சைக்கிள்களில் ஆர்வமுள்ள தமிழ் இளையோர், நவீன தொழில் நுட்ப கைத்தொலைபேசி பாவனையும் சமூக தொலைத்தொடர்பு கலாசாரமும், கிரிக்கட் பண்பாடு, இளையோர் றியோ ஐஸ்கிறீம் பண்பாடு போன்ற 7 வகையிலான  இளையோர் இனங்காணப்பட்டனர்.
அதில் சண்டியர் கலாசாரமும், இதனுடன் தொடர்புடைய அடிதடி வாள்வெட்டு குழு மோதல். போதைப்பொருள் பாவனை, கற்பழிப்பு, சிறுவர் துஸ்பிரயோகம், ஆகியன இன்று தமிழ் மக்களிடையே அடிக்கடி பேசப்படும் சமூக விவகாரங்களாக காணப்படுவதுடன் எதிர்கால சந்ததியினரை பாதிக்கும் விவகாரமாகவும் காணப்படுகிறது.
இளைஞர்களிடையே இது தொடர்பில் கலந்துரையாடிய போது அதிகமான இளைஞர்கள் மேற்குறித்த குற்றச்செயல்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனபதனை தெரிவித்திருந்தனர். அப்போது தான் குறித்த குற்றச்செயல்களை குறைக்க முடியும் என தெரிவித்தனர்.  ஆனால் மேலைத்தேய தண்டனை முறைமைகள், எம் பண்பாட்டு புலத்துடன் இணைந்த வகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய தேவையும் உள்ளது.
அனைத்துக்கும் மேலாக பல்கலைக்கழகம் மற்றும்  பாடசாலை மட்டங்களில் குற்றவியல் தொடர்பான கற்கைநெறி அறிமுகப்படுத்தப்பட வேண்டிய கட்டாய தேவை உள்ளது. அதன் மூலம் தான் இளையோர் மத்தியில் விழிப்பணவு சரியான முறையில் சென்றடையும். இது காலத்தின் தேவையாகும் என மேலும் தெரிவித்தார்.