பாகிஸ்தானில் மாணவர் படுகொலை: போலீஸ் கஸ்டடியில் 8 மாணவர்கள்

252 0

பாகிஸ்தானில் கடவுளை அவமதித்ததாக கூறி மாணவரை படுகொலை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 8 மாணவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணம் மர்தானில் உள்ள கான் அபதுல் வாலி கான் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் துறையில் படித்து வந்தவர் மஷால் கான். இவர் தனது சமூக வலைத்தளத்தில், கடவுளை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது. எனவே, அவரை ஒரு கும்பல் கொடூரமாக தாக்கி, நிர்வாணமாக்கி கொலை செய்துள்ளது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பல்கலைக்கழக வளாகத்திலேயே இந்த படுகொலை நடந்துள்ளது. இந்த கொலையை ஏராளமான மாணவர்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்ததுடன், நடந்த சம்பவத்தை செல்போனில் படம் பிடித்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதேபோல் அப்துல்லா என்ற மற்றொரு மாணவரும் கடுமையாகத் தாக்கப்பட்டார். ஆனால், போலீசார் வந்து அவரை உரிய நேரத்தில் மீட்டு அழைத்துச் சென்றதால் உயிர்பிழைத்தார்.

மாணவர் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்கலைக்கழகத்தில் படித்து வரும் 8 மாணவர்களைக் கைது செய்தனர். அவர்கள் இன்று தீவிரவாத எதிர்ப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இதனை ஏற்ற கோர்ட், கைது செய்யப்பட்ட 8 பேரையும் நான்கு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது.

மாணவர் படுகொலை செய்யப்பட்டதற்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டத்தை கையில் எடுத்துகொள்வதை அரசு பொறுத்துக்கொள்ளாது என்று எச்சரித்ததுடன், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.