நீச்சல் போட்டிக்கு வருகை தந்த சிறுமிகளை கையடக்கத் தொலைபேசியில் காணொளி எடுத்த சந்தேக நபருக்கு விளக்கமறியல் !

118 0

சுகததாச விளையாட்டரங்கில்  நீச்சல் போட்டிக்கு வருகை தந்த சிறுமிகளைக் கையடக்கத் தொலைபேசி மூலம் காணொளி எடுத்த  குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க நேற்று செவ்வாய்க்கிழமை (18) உத்தரவிட்டுள்ளார்.

கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஹொரணை பகுதியைச் சேர்ந்த  சந்தேக நபருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீச்சல் பயிற்சியாளர்கள் மற்றும் நீச்சல் போட்டிக்கு வருகை தந்த சிறுமிகளின் பெற்றோர் செய்த முறைப்பாட்டின்  அடிப்படையில்  இலங்கை மின்சார சபையின் ஊழியரான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

கடந்த 15ஆம் திகதி சுகததாச நீச்சல் தடாகத்தில் மேல் மாகாண நீச்சல் போட்டியொன்று இடம்பெற்றுள்ள நிலையில்,  போட்டியில் கலந்து கொள்ளவிருந்த சிறுமிகள் நீச்சல் உடை அணிந்து பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த போது சந்தேக நபர் தனது கையடக்கத் தொலைபேசியில் அதனை காணொளி எடுத்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது கைத்தொலைபேசியை சோதனையிட்டபோது சிறுமிகளின் பல காணொளிகள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேக நபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.