பாரம்பரியமான விவசாய நிலங்கள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ள போதிலும் அது பேச்சளவில் மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் அந்தப் பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை பேணுவதற்கான காணி பயன்பாட்டுப் பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாத நிலையில் தான் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) இடம்பெற்ற அமர்வின்போது நிலையியற் கட்டளை 27(2)இன் கீழ் வடக்கு, கிழக்கு காணி விவகாரம் தொடர்பில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் அந்தப் பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பேணுவதற்கான காணி பயன்பாட்டுப் பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாத நிலையில்தான் உள்ளன.
குடியிருப்புகளைச் சுற்றியுள்ள பெரும்பாலான இடங்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக வர்த்தமானி வெளியிடப்பட்டிருத்தல் இதற்கு காரணமாகும். அவ்வாறே மக்களுக்கான காணிகளை விடுவிப்பதில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலும் பல பிரச்சினைகள் காணப்படுவதும் இதற்கு காரணமாக அமைகிறது.
1985ஆம் ஆண்டு நில அளவீட்டு வரைபடத்தின்படி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி மற்றும் எஞ்சிய காடுகள் விடுவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், விடுவிப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள அல்லது பிரதேச செயலாளர்களினால் விடுவிக்கக் கோரப்பட்டுள்ள காணியின் அளவு என்ன?
அம்பாறை, மொனராகலை, திருகோணமலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு ஜனாதிபதி அண்மையில் விஜயம் செய்தபோது அவர்களது பாரம்பரிய விவசாய நிலங்கள் பறிபோயுள்ளமை தெரிய வந்தது.
இந்நிலையில், மீண்டும் தரப்படும் என அரசு கூறினாலும் அது இன்று வரை பேச்சளவில் மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் வழங்கிய இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் திகதி என்ன?
2383/5 வர்த்தமானி மூலம் வன உயிர் மற்றும் விருட்சங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாகவும் உத்தேச நீர்வாழ் உயிரின வளர்ப்பு பேட்டையை தாபிக்கும் பொருட்டும் அல்லது கடல் பாதுகாப்பு என இனங்காணப்பட்டுள்ள நிலப் பிரதேசத்தை விடத்தல் தீவு இயற்கை ஒதுக்கத்தின் எல்லையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே இதன் உண்மையை நிலை என்ன?
மேலும், விவசாயிகள் பாரம்பரியமாக விவசாயத்தை மேற்கொண்டு வரும் விளைநிலங்களை பாதுகாக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவளத்தைப் போன்று விவசாயமும் பாதுகாக்கப்பட வேண்டும். பாரம்பரிய விவசாய நிலங்கள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி பல்வேறு மாவட்டங்களுக்கான தனது விஜயத்தின்போது உறுதியளித்துள்ள போதிலும் அது பேச்சளவில் மட்டுமே இருந்து வருகிறது.
பதவிய ஸ்ரீபுர, கோமரங்கடவல, மொரவெவ, கந்தளாய், சேருவில, வெருகல், அம்பாறை, மொனராகலை மாவட்டங்களிலும் வடக்கிலும் இந்தப் பிரச்சினை நிலவி வருகிறது. அவர்களின் விவசாய நிலங்கள் விடுவிக்கப்படும் வரை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்றார்.

