ஐந்து மாதகாலப்பகுதியில் மின்பாவனையாளர்களிடமிருந்து மேலதிகமாக 12000 ரூபா அறவீடு

114 0

இலங்கை மின்சார சபை கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் மாத்திரம் 9000 கோடி ரூபா மேலதிக வருமானத்தை ஈட்டியுள்ளது. இக்காலப்பகுதியில் மின்பாவனையாளர்களிடமிருந்து மேலதிகமாக 12000 ரூபா அறவிடப்பட்டுள்ளது. மின்கட்டண அதிகரிப்பால் ஒட்டுமொத்த மக்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனப் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (6) இடம்பெற்ற மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மின்சார சபையை 12  கூறுகளாகப் பிரித்து அவற்றைத் தனியார் தரப்பினருக்கு வழங்கும் இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்.அரச சேவை தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பது  தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது 1200  அரச நிறுவனங்கள் காணப்படுகின்றன.100 ஆண்டுகளுக்கு முன்னர்  10 அரச நிறுவனங்கள் மாத்திரமே இருந்தன.அரச நிறுவனங்களின் மொத்த செயலாற்றுகை தொடர்பில் மதிப்பாய்வு செய்ய வேண்டும். நட்டமடையும் அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

நட்டமடையும் அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.ஆனால் மறுசீரமைப்பின் போது கடைப்பிடிக்க வேண்டிய வெளிப்படைத்தன்மை மற்றும் பொது கோட்பாடுகள் தொடர்பில் நாணய நிதியம் முன்வைத்த பொதுவான அறிவுறுத்தல்களை அரசாங்கம் கடைப்பிடிக்கவில்லை.

மறுசீரமைப்புக்கள் வெளிப்படைத்தன்மையுடன் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.பெயர் பலகைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ள  அரச நிறுவனங்களை மூட வேண்டும்.ஒரு சேவையை மூன்று அல்லது நான்கு அரச நிறுவனங்கள் முன்னெடுக்கின்றது ,இவற்றை ஒன்றிணைக்க வேண்டும்.

அத்துடன் அரச மற்றும் தனியார் பங்குடைமையுடன் அரச நிறுவனங்களின் சேவையை வினைத்திறனாக்க வேண்டும்.இவ்வாறான முறையான வழிமுறைகளை விடுத்து தமது விருப்பத்துக்கு அமைய அரச நிறுவனங்களை மறுசீரமைத்தால் அல்லது தனியார் மயப்படுத்தினால்  முரண்பாடுகள் மாத்திரமே தோற்றம் பெறும்.

இலங்கை மின்சார சபை கடந்த ஐந்து மாதங்களில் மாத்திரம் 9000  கோடி ரூபா மேலதிக வருமானத்தை ஈட்டிக் கொண்டுள்ளது.இக்காலப்பகுதியில் மாத்திரம்  75 இலட்சம் மின்பாவனையாளர்களிடமிருந்து மேலதிகமாக 12000 ரூபா அறவிடப்பட்டுள்ளது.முறையற்ற வகையில் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தினோம்.

மின்சார சபையின் நட்டத்தை முகாமைத்துவம் செய்வதற்காக மின்கட்டணம் பலமுறை அதிகரிக்கப்பட்டது.இதனால் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.5 இலட்சம் மின்பாவனையாளர்களின் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்சார சபையின் செயலாற்றுகையை வினைத்திறனான முறையில் முன்னெடுக்காமல் மின் கட்டமைப்பைச் சீரமைக்க முடியாது.தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சட்டத்தினால் எவ்வித மாற்றமும் ஏற்படாது தனியார் தரப்பினரது பிரவேசத்துக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.இதனால் திருத்திக் கொள்ள முடியாத அளவுக்கு எதிர்காலத்தில் மின் கட்டமைப்பு பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.