மன்னார் பேசாலையில் வாள் வெட்டு ; ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை

115 0

மன்னார் – பேசாலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட  முருகன் கோவிலடி 7ஆம் வட்டார பகுதியில் இடம் பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில்  குடும்பஸ்தர் ஒருவர் பலத்த காயங்களுடன் யாழ்ப்பாணம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த சம்பவமானது கடந்த 22 ஆம் திகதி புதன்கிழமை இரவு 9 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்தவர் அதே ஊரைச் சேர்ந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிய வருகிறது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்  கடந்த  23 ஆம் திகதி பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

எனினும், வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர்.

மேலும்,  அன்றையதினம் வாள் கத்தி இரும்பு கம்பிகளுடன் 15க்கும் மேற்பட்ட நபர்கள் வந்ததாகவும் வந்தவர்கள் கடும் போதையில் இருந்ததாகவும்  தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் தொடர்ச்சியாக இவ்வாறான சண்டை சச்சரவுகளில்  ஈடுபட்டு வருவதாகவும்  பொலிஸார்  இவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும் என   கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

குறித்த பகுதி மக்கள்  வாள்வெட்டு நபர்களுக்கு எதிராக  கையெழுத்திட்டு உரிய  அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.