மதுரை அருகே சோழவந்தானில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.
கோடைகாலம் தொடங்கியது முதல் மதுரை மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்தது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்னர், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில், சோழவந்தான் பகுதியில் நேற்று முன்தினம் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது பேட்டை பகுதியில் 10 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 5,000 வாழை மரங்கள் சூறைக் காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் முறிந்து விழுந்தன.
இழப்பீடு வழங்க வேண்டும்: அறுவடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தங்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

