பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர்

20 0

பெண்தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் வழங்கப்படும்போது சிறந்த மாற்றங்களை எதிர்பார்க்க முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் மது போதைக்கு எதிரான இயக்கம் நேற்‍று (05) யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் விழிப்புணர்வு கருத்தரங்கினை நடத்தியது.

இதில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கலந்துகொண்டார்.

‘மதுசாரம் மற்றும் போதைப்பொருள் பாவனையால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும்’ என்ற தொனிப்பொருளில் இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை ஒரு சவாலான விடயமாக காணப்படுவதாக இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனையால் பெண்கள் அதிகளவில் எதிர்நோக்கும் சவாலான நிலைமையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் கூறினார்.

போதைப்பொருளுக்கு எதிராக பிரசாரம் செய்வதை விடுத்து, இளைஞர், யுவதிகளை மாற்று செயற்பாடுகளில் ஈடுபடுத்தி, அவர்களின் திறன்களுக்கு களம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என தெரிவித்த ஆளுநர், அதற்காக தனது பணிப்புரைக்கமைய வடக்கு மாகாண விளையாட்டுத்துறை மற்றும் கலாசார திணைக்களம் ஆகியன இணைந்து கிராமிய மட்டத்தில் புதிய செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பெண்தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் வழங்கப்படும்போது சிறந்த மாற்றங்களை எதிர்பார்க்க முடியும். அதற்கமைய நிலையான பொருளாதாரத்தை பெற்றுக்கொள்வதற்கான புதிய திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் போதைப்பொருளானது குடும்பங்களின் அடிப்படையை சிதைத்துக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு எதிராக செயற்பட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஆளுநர் இதன்போது வலியுறுத்தினார்.