பணத்திற்காக கட்சியை காட்டிக் கொடுத்து விட்டார் மைத்திரி

11 0

பணத்துக்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காட்டிக் கொடுத்து விட்டார். ஜனாதிபதி வேட்பாளர் விஜேதாச ராஜபக்ஷ என அவரால் தன்னிச்சையாக தீர்மானம் எடுக்க முடியாது என சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கண்டியில் ஞாயிற்றுக்கிழமை (5) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

செயலாளர் பதவியிலிருந்து என்னை நீக்கியமை குறித்து நான் கவலையடைவில்லை. ஆனால் கட்சிக்கும் எனக்குமிடையிலான பிணைப்பை முற்றாக இல்லாமலாக்கும் வகையில் எனது உறுப்புரிமையும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பறிக்கப்பட்டமையே வேதனையளிக்கிறது. எவ்வாறிருப்பினும் எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிமன்றத்தின் ஊடாக நீதி கிடைக்கும் என்று நம்புகின்றேன்.

கட்சியின் அங்கத்தவர்கள் அல்லாத ஒருவர் தற்போது பதில் தவிசாளராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். மலைநாட்டு ஒப்பந்தத்தின் மூலமே எமது நாடு காட்டிக் கொடுக்கப்பட்டது. அதே போன்று தற்போது மலைநாட்டு பகுதியில் உள்ள ஒருவரால் சுதந்திர கட்சியும் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அவரே புதிய தவிசாளருக்கான பெயரை முன்மொழிந்துள்ளார்.

பதில் தவிசாளராக நியமிப்பதற்கு சுதந்திர கட்சியில் வேண்டியளவு சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் இன்று காசுக்காக கட்சி காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. மே தினத்தன்று விஜேதாச ராஜபக்ஷவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பளர் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஆனால் அவரால் அவ்வாறு தனித்து தீர்மானம் எடுக்க முடியாது.

அரசியல் குழு கூட்டம் கூடி தீர்மானம் எடுக்கப்பட்டு, அந்த தீர்மானம் மத்திய குழுவில் நிறைவேற்றப்பட்ட பின்னரே இறுதி தீர்மானத்தை எடுக்க முடியும். ஆனால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அவ்வாறு கூறினாலும், விஜேதாச ராஜபக்ஷ தான் இது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை எனக் கூறுகின்றார். எவரிடமாவது பணம் இருக்கிறது என்பதற்காகவும், அமைச்சுப்பதவி இருக்கிறது என்பதற்காகவும் அவருக்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க வாய்ப்பளித்தால் இது நியாயமானதல்ல என்றார்.