பொதுத் தேர்தல் ஊடாக அரசாங்கத்தைஅமைக்க பொதுஜன பெரமுன கவனம் செலுத்த வேண்டும்

10 0

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகைமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உண்டு.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற தேர்தலுடன் அரசாங்கத்தை ஸ்தாபிப்பது குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (5) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மே தின கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான கருத்துக்கள் மாத்திரம் வெளிப்பட்டதே தவிர தொழிலாளர்களின் உரிமை பற்றி எந்த அரசியல் கட்சி மேடைகளிலும் பேசப்படவில்லை.மே தின கூட்டம் அரசியல் கூட்டமாக மாற்றமடைந்துள்ளமை கவலைக்குரியது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்ற  கோரிக்கையை பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் பலமுறை முன்வைத்துள்ள போதும் ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை.அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்தும் சூழல் காணப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகைமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உண்டு.ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தல் ஊடாக அரசாங்கத்தை ஸ்தாபிப்பது குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பலப்படுத்தும் பொறுப்பு கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளது.கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக் கொள்ளுமாறு கட்சியின் தலைவர்கள் மற்றும் தேசிய அமைப்பாளரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ இவ்விடயம் குறித்து பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.கட்சியில் இருந்து விலகிச் சென்ற சிரேஷ்ட உறுப்பினர்களை மீண்டும் இணைத்துக் கொண்டு ஒன்றிணைந்து செயற்பட்டால் பொதுஜன பெரமுன தலைமையில் பலமான அரசாங்கத்தை ஸ்தாபிக்கலாம் என்றார்.