யாழ்.மாவட்ட புதிய கட்டளை தளபதி – வடக்கு முதல்வரை சந்தித்தார்.

399 0

யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளை தளபதியாக கடமையேற்றிருக்கும் மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி இன்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சிநேகபூர்வமாக சந்தித்து பேசியுள்ளார்.

இன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு யாழ்.கோவில் வீதியில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் முதலமைச்சரை அவர் சந்தித்துள்ளார்.

யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க பதவி உயர்வு பெற்று சென்றதை தொடர்ந்து புதிய கட்டளை தளபதியாக ஹெட்டியாராச்சி நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

இந்நிலையில் தமது பதவியேற்பை தொடர்ந்து முதலமைச்சரை சிநேகபூர்வமாக அவர் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் பின்னர் முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கட்டளை தளபதியுடன் சந்திப்பு பல நல்ல விடயங்கள் தொடர்பாக பேச வைத்திருக்கின்றது.

இங்குள்ள பிரதானமான பிரச்சினைகளை அவர் அறிந்துள்ளார். இங்குள்ள இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் காணிகளில் மீள்குடியேற்றுவது தனது பிரதான கடமை என அவர் கூறியுள்ளார்.

அத்துடன் தான் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கில் கடமையாற்றியபோது இங்கிருந்த நிலமைகளுக்கும் இப்போதுள்ள நிலமைகளுக்கும் வித்தியாசம் உள்ளதாக கூறினார்.

அதேபோல் 2012ஆம் ஆண்டு இருந்த கட்டிடங்கள் இப்போது இடிக்கப்பட்டுள்ளதாக கூறியதுடன் அவ்வாறு இடித்திருக்க வேண்டியதில்லை என கூறி வருத்தப்பட்டார்.

அதேபோல் மீள்குடியேற்றத்திற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அதில் தாமதங்கள் இருக்கலாம் ஆனால் நிச்சயமாக செய்யப்படும் என கூறினார் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.