வாரியபொல விபத்தில் பெண் பலி ; குழந்தை உட்பட நால்வர் காயம்!

15 0

குருணாகல் – புத்தளம் பிரதான வீதியில் வாரியபொல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் குழந்தை  உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (30) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குருணாகலில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கால்வாயில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது வேன் சாரதி மற்றும் வேனில் பயணித்த மூன்று பெண்களும் சிசுவும் காயமடைந்துள்ள நிலையில்  நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.