வடகிழக்கில் இடம்பெறும் நில அபகரிப்புக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் – சிவராசா மோகன்

21 0

இந்த நாட்டிலே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சட்டரீதியாகவும் அரசியல் அமைப்பு ரீதியாகவும் முன்வைக்கப்பட்ட 13 ஆம் திருத்த சட்டம் அமுல்படுத்த வேண்டும் அதேவேளை வடகிழக்கில் தமிழர் பகுதியில் இடம்பெறும் நில அபகரிப்பு போன்ற பல பிரச்சினைகளுக்கு எதிராக தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளாக செயற்படும் அனைவருமே ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டும் அதற்கு நாங்களும்  இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக தமிழர் சமூக ஜனநாயக கட்சி தேசிய அமைப்பாளர் சிவராசா மோகன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு புதூரில் அமைந்துள்ள ஈ.பி.ஆர்.எல்.எப். முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர் வரதராஜ பெருமாள் அணியின் தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்

தமிழர் சமூக ஜனநாயக் கட்சியின் காங்கிரஸ் மாநாடு கடந்த 21,22 ஆம் திகதிகளில் யாழ். தந்தை செல்வா அரங்கில் இடம்பெற்றது அதில் 17 பேர் கொண்ட மத்தியகுழு நியமிக்கப்பட்டு அதன் முதலாவது கூட்டம் கடந்த 28 ஆம் திகதி  இடம்பெற்றது அதில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

அதில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு முன்வைக்கப்பட்ட தீர்வான 13 ஆம் திருத்த சட்டம் அதனுடன் இணைந்த மாகாண சபை முறைமை ஆகிய இரண்டு விடையங்களும் அன்று என்ன வடிவில் முன்வைக்கப்பட்டதோ அது இன்று பல்வேறு வகையில் நீத்து போகச் செய்யும் வகையில் அதன் உள்ளடக்கம் கரைத்து வடித்து கொட்டப்பட்ட ஒரு நிலையிலே உள்ளது.

அது இன்று வரை தமிழ் மக்களுக்கு இந்த நாட்டிலே சட்டரீதியாக அரசியல் அமைப்பு ரீதியாக கிடைத்த இந்த அதிகார பகிர்வுக்கு எங்களது தோழர்களும் ஆயிரக்கணக்கான போராளிகள் பொதுமக்கள் எல்லோருடைய இழப்பிற்கு பின்னர் மிஞ்சி இருக்கின்ற மாகாணசபை முறைமையையும் அதிகார பகிர்வு முறைமையையும் முறையாகவும் முழுமையாகவும் அமுல்படுத்தி நிறைவேற்றப்பட வேண்டும்.

இந்த நாட்டில் உள்ளூராட்சி மன்றம் மாகாணசபை தேர்தல்கள் தொடர்ந்து ஒத்தி வைக்கப்படுகின்றது இது உண்மையில் ஜனநாயக விரோதமான போக்காகும் இந்த நாட்டில் ஜனநாயகம் நிலைபெறவேண்டுமானால் எல்லா மக்களது அபிலாஷைகளை ஈடு செய்யக் கூடிய வகையில் இந்த தேர்தல்கள் உரிய காலத்தில் உரிய முறையில் நடாத்தப்படவேண்டும் அதனை வலியுறுத்தி தீர்மானம் மேற்கொண்டுள்ளோம்

அதேவேளை வடக்கு கிழக்கில் செயற்படுகின்ற அரசியல்கட்சிகள் சமூக மட்ட அமைப்புக்கள் ஆக இருந்தாலும் சரி தமிழ் மக்கள் பிரச்சனை தொடர்பாக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது.

நில ஆக்கிரமிப்பு, மீனவர் பிரச்சனை, மட்டக்களப்பு மயிலத்தமடு மேச்சல்தரை பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் இவற்றுக்கு எதிராகத் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளாக செயற்படும் அனைவருமே ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டி இருக்கின்றது.

இங்குத் தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் என்றும் ஏனையவற்றை அவ்வாறு இல்லாத கட்சிகள் எனவும் பிரித்து பார்க்கப்படுகின்ற ஒரு நிலை காணப்படுகின்றது. இந்த நிலை இல்லாமல் செய்யப்படவேண்டும்.  அதனை செய்யாது போனால் அது தமிழ் மக்களுடைய ஒற்றுமையையும் பலத்தையும் குறைக்கும். எனவே எதிர்காலத்தில் தமிழ் மக்கள் முகம் கொடுக்கின்ற அனைத்து பிரச்சினைகள் தொடர்பாகவும் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் குரலை வெளிப்படுத்தக் கூடிய வகையில் செயற்படவேண்டும்.

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாகப் பேச வேண்டிய தேவை இருக்கின்றது இந்த விடையங்களை அவதானித்துக் கொண்டிருக்கின்றோம் அதேவேளை தமிழ் வேட்பாளர் நிறுத்தவேண்டும் என பேசிக் கொண்டிருக்கும் அவர்கள் இன்னும் ஒரு திட்டவட்டமான தீர்மானம் எடுக்கவில்லை இதன் சாதக பாதகம் தொடர்பாகத் தமிழ் கட்சிகளுடன் ஒன்றிணைந்து பேச்சு இடம்பெறவில்லை அவ்வாறு இடம்பெறும் போது எங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்துவோம் என்றார்.