மே தினத்தை கொண்டாடி மகிழ்ந்த தலைமன்னார் ஊர்மனை கிராம மக்கள்!

26 0

தலைமன்னார் ஊர்மனை கிராம மக்கள் இம்முறை மே தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

இக்கிராம மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பொருளாதார பின்னடைவு மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறலால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளடங்களாக பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இந்த கிராம மக்கள் இன்றைய தினம் (1) மே தினத்தை ஒன்றுதிரண்டு மிகவும் ஒற்றுமையாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தின் புனித லோறன்சியார் ஆலய பங்குத்தந்தை சந்தியோகு மார்க்கஸ் அடிகளார் தலைமையில் புனித லோரன்சியார் மீனவ கூட்டுறவு சங்கம் மற்றும் லோரன்சியார் விளையாட்டு கழகம் கூட்டாக இணைந்து மே தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் மீன்பிடி துறையில் அமைந்துள்ள சுரூபத்தடியில் இன்று  காலை மே தின கொண்டாட்ட நிகழ்வு திருப்பலியுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதையடுத்து கிராம மக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அந்த மக்கள் யாவரும் ஒன்றுதிரண்டு மீன்பிடி துறைமுகத்தில் போட்டி நிகழ்வுகளில் ஈடுபட்டனர்.

நீச்சல் போட்டி, தெப்பம் வலிக்கும் போட்டி, பெரிய மற்றும் சிறிய படகுகளின் போட்டி, பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றன.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தின் கடற்படையினர் மற்றும் பொலிஸ் தரப்பினர் உள்ளிட்ட பல்வேறு பிரதிநிதிகள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர்.

மன்னர் மாவட்டத்தில் பல்வேறு மீன கிராமங்களில் மே தின கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.