போலி முகநூல் பதிவுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல்!

56 0

போலி முகநூல் பதிவொன்றுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (30) வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு 9ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின்கீழ் குறித்த வழக்கினை பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி நாகராஜா மோகன் தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுவை ஆதரித்து சிரேஷ்ட சட்டத்தரணி இராமலிங்கம் திருக்குமாரநாதன் மன்றில் சமர்ப்பணம் செய்திருந்தார்.

குறித்த வழக்கு தொடர்பில் சமர்ப்பணம்செய்கையில்,

மெய்யுறுதிப்படுத்தப்படாத முகநூல் நிகழ்நிலைக் கணக்கினை பயன்படுத்துபவரது ஆள் அடையாளம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும், குறித்த முகநூல் கணக்கு பயன்படுத்தப்படும் அமைவிடம் அவற்றோடு தொடர்புடைய ஏனைய நிகழ்வுகள் பற்றிய விடயங்கள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும், போன்ற விண்ணப்பங்களை முன்வைத்ததோடு முகநூல் நிறுவனத்திடமிருந்தும், டயலொக் நிறுவனத்திடமிருந்தும் மேற்குறித்த விடயங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய விபரங்களை உடனடியாக பெறுவது தொடர்பாகவும் அவற்றை உடனடியாக கௌரவ நீதிமன்றத்திற்கு சமர்ப்பிப்பது தொடர்பாகவும் தேவையானதும், அவசியமானதுமான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு 01இல் செயற்படுகின்ற குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணணிக் குற்றங்கள் விசாரணைப் பகுதியின் சமூக ஊடகப் பிரிவின் பணிப்பாளருக்கு உத்தரவிடுவதற்கான கட்டளையினை பிறப்பிப்பிக்குமாறு சமர்ப்பணம் செய்யப்பட்டது.

குறித்த விண்ணப்பங்களை ஏற்ற மாவட்ட நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா குறித்த கட்டளையை பிறப்பித்திருந்தார். திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இவ்வாறான வழக்கு தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் தடவையாகும்.