‘வைப்புநிதி உங்கள் அருகில்’ என்ற பெயரில் இபிஎஃப் அலுவலகம் சார்பில் இன்று குறைதீர்வு முகாம்

20 0

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் (இபிஎஃப்ஓ) சார்பில் ‘வைப்புநிதி உங்கள் அருகில்‘ (நிதி ஆப்கே நிகட் 2.0) என்ற பெயரில் இன்று (ஏப்.29) குறைதீர்வு முகாம் நடத்தப்படுகிறது.

காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது. இதில், முதலாளிகள், ஒப்பந்ததாரர்கள், தொழிலாளர்களுக்கான ஆன்லைன் சேவைகள் பற்றிய செயல்முறை விளக்கம், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள் உடனான கலந்துரையாடல், புதிய முயற்சிகள், சீர்திருத்தங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, உறுப்பினர்கள், ஓய்வூதியர்கள், முதலாளிகளிடம் இருந்து வரும் குறைகளை நிவர்த்தி செய்தல், ஓய்வூதியர்களுக்கு மின்னணு ஆயுள் சான்றிதழ் சமர்ப்பித்தல், ‘இ-நாமினேஷன்’ தாக்கல் செய்தல், ஒப்பந்ததாரர் விவரங்களை பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகள் இதில் மேற்கொள்ளப்படும்.

சென்னை மாவட்டத்தில், ‘பொன் வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளி, சப்தகிரி நகர், ஆற்காடு சாலை, ஏஆர்எஸ் கார்டன் எதிரில், சென்னை-600 087’ என்ற முகவரியிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் ‘சாய் மிர்ரா இன்னோஃபார்ம் பிரைவேட்லிமிடெட், கோத்ரெஜ் சாலை, பட்டரைவாக்கம், சிட்கோ தொழிற்பேட்டை, அம்பத்தூர் சென்னை-600 053’ என்ற முகவரியிலும் முகாம் நடைபெறுகிறது.

அதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘பேராசிரியர் தனபாலன் அறிவியல், மேலாண்மை கல்லூரி, ராஜீவ்காந்தி சாலை, சென்னை-603 103’ என்ற முகவரியிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ‘ஆட்டோனியம் நிட்டோகு சவுண்ட் புரூஃப் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஆர்என்எஸ்-15, சிப்காட் தொழில்துறை வளர்ச்சி மையம், ஒரகடம், வடக்குப்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம்-603 103’ என்ற முகவரியிலும் நடைபெறுகிறது. மேலும் விவரங்களை அறிய https://www.epfindia.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.