நாட்டின் மிக முக்கியமான சுற்றுலா நகரமாக விளங்கும் நுவரெலியாவின் பல இடங்கள் குப்பைகள், கழிவுகளால் அசுத்தமாகி, சுகாதார சீர்கேட்டினை எதிர்கொண்டு வருகின்றன.
இலங்கையில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் முக்கியமான நுவரெலியாவுக்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கமாகும். சர்வதேச அளவில் புகழ்பெற்ற இச்சுற்றுலா நகரில் சுகாதார நிலை பாதிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக நுவரெலியா நகரின் பல இடங்களில் போதிய குப்பைத் தொட்டிகள் வைக்கப்படாத காரணத்தினால் கண்ட இடங்களில் குப்பைகள் வீசப்படுகின்றன. இதனால் நகரம் அசுத்தப்பட்டு வருவதோடு, சுகாதார சீர்கேடான நிலையினையும் எதிர்கொண்டு வருகிறது.

மேலும், அங்கே சுகாதாரத்தை பேணும் வகையிலான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் நுவரெலியா மாநகர சபை சற்று பின்தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
நுவரெலியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் ஹோட்டல்கள், உணவு விடுதிகளுக்கு சென்று உணவு சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, உணவை சமைத்து எடுத்துக்கொண்டு வாகனங்களில் வருகின்றனர்.
இவ்வாறு வருபவர்கள் நுவரெலியா பிரதான நகர், ஹக்கல பூங்கா, விக்டோரியா பூங்கா, கிறகறி வாவி கரை போன்ற பகுதிகளில் வீதியோரங்களிலும் புல்வெளிகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும் தங்களது வாகனங்களை நிறுத்தி சாப்பிடுகின்றனர்.
இவர்கள் சமைத்துவிட்டு அல்லது கொண்டுவந்த உணவை சாப்பிட்டு முடித்துவிட்டு, எஞ்சிய உணவுக் கழிவுகள், மாமிசங்கள், எலும்புத்துண்டுகள், பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள், எளிதில் மக்கிப்போகாத பொலித்தீன் பைகளில் கட்டப்பட்ட சில கழிவுப்பொருட்களை அதே இடங்களில் வீசிவிட்டுச் செல்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் வீசிச் செல்லும் இந்த கழிவுகளை உட்கொள்ள கால்நடை விலங்குகள் அப்பகுதியை முற்றுகையிடுகின்றன. இதில் நாய்கள், பறவைகள் கழிவுகளை நாலாப்புறமும் இழுத்துச் சென்று போடுவதால் நடைபாதைகள் உட்பட நகரின் பல இடங்களும் அலங்கோலமாக காட்சி தருகின்றன. இதனால் வீதி வழியே செல்லும் வாகன சாரதிகளும் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
வீதியில் எறியப்படும் குப்பைகளால் ஈக்களின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக சாதாரண நோய்களும் தொற்றுக்களும் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே, சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருகை தரும் இடங்களில் தேவைக்கேற்ப குப்பைத் தொட்டிகளை வைப்பது அவசியம் எனவும் அப்பகுதிகளுக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகள் இதனை கவனத்திற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


