மடக்கும்புர தோட்டத்தில் 23 தனி வீடுகள் பகிர்ந்தளிப்பு

356 0
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரத்தின் பணிப்புரைக்கேற்ப வட்டகொடை சவுத் மடக்கும்புர கீழ்ப்பிரிவு தோட்டத்தில் 23 தனி வீடுகளைக் கொண்ட தனிக்கிராமம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த பல வருடங்களுக்கு முன்பு தீ விபத்தொன்றில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கே இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மடக்கும்புர பிரதேசத்தைப் பிறப்பிடமாக கொண்ட மாரியப்பா என்ற தொழிற்சங்கவாதியைக் கௌரவிக்கும் வகையில் மாரியப்பாபுரம் என்று இந்தக் கிராமத்துக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வீட்டுக்கும் தபால் முகவரிகள் குறிப்பிடப்பட்டு கடிதங்கள் சேகரிப்பதற்கான தபால் பெட்டி ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். இந்த கிராமத்துக்கு உள்ளக பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. சகல வீடுகளுக்கும் தொலைக்காட்சி பெட்டிகள், கட்டில்கள், தளபாடங்கள், குளிர்சாதனப்பெட்டிகள் உட்பட பல பொருடகள் வழங்கப்பட்டுள்ளன.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் வட்டகொடை அமைப்பாளர் பாலுவண்ணனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தத் திறப்பு விழா நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிப் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரமான மயில்வாகனம் திலகராஜ்,

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சிங்.பொன்னையா உட்பட தோட்ட முகாமையாளர்கள், முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.