சேத்துப்பட்டு ஏரிக்கு கீழ் சில வாரங்களில் மெட்ரோ சுரங்கப்பணி

15 0

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம்–சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில், சேத்துப்பட்டில் இருந்து கீழ்ப்பாக்கம் நோக்கி சுரங்கப்பாதை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக, சேத்துப்பட்டு ஏரிக்குகீழ் சுரங்கப்பாதை பணி சில வாரங்களில் தொடங்கும் என்றுமெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இரண்டாம் கட்டமெட்ரோ ரயில் திட்டம், 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் ஒரு வழித்தடம் மாதவரம்–சிறுசேரி சிப்காட் வரையிலான மூன்றாவது வழித்தடம் ஆகும். 45.4 கி.மீ. தொலைவு கொண்ட இந்த வழித்தடத்தில் மாதவரம் பால்பண்ணை மற்றும் பசுமை வழிச்சாலையில் சுரங்கப்பாதை பணிகள் அடுத்தடுத்து தொடங்கி நடைபெறுகின்றன.இதன் ஒரு பகுதியாக, 2.8 கி.மீ.தொலைவில் சேத்துப்பட்டில் இருந்து நுங்கம்பாக்கம் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கியது. இதுவரை 225 மீட்டர்வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலமாக, 80 மீட்டர் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சேத்துப்பட்டில் இருந்து கீழ்ப்பாக்கம் நோக்கி, சுரங்கப்பாதை பணிகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தப்பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து சென்னை மெட்ரோரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சேத்துப்பட்டு வடக்கு–கீழ்ப்பாக்கம் நோக்கி சுரங்கப்பாதை பணி சமீபத்தில் தொடங்கியது. இந்தபணியை மேற்கொள்ள “தாமிரபரணி” என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது, சேத்துப்பட்டு ரயில்வே தண்டவாளம் அருகே சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன.

சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம் ஆகிய இரண்டு நிலையங்களுக்கு இடையே 838 மீ தூரத்தை இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் கடக்க உள்ளது.

முதலில் சேத்துப்பட்டு ரயில்வேதண்டவாளத்தை கடந்து செல்லவேண்டும். அதன்பிறகு, சேத்துப்பட்டு ஏரிக்கு கீழ் தரைமட்டத்தில் இருந்து 18 மீட்டர் கீழ் சுரங்கப்பாதை பணி நடைபெறும். இந்த பணி அடுத்த சில வாரங்களில் தொடங்கும்.

ரயில்வே தண்டவாளம், படகு குழாம், சேத்துப்பட்டு சுற்றுச்சூழல் பூங்கா ஆகியவற்றை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இது மிகப்பெரிய சவாலாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.