சிறையில் மனைவியின் உணவில் டாய்லெட் க்ளீனர் கலப்பு: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் புகார்

20 0

 தனது மனைவிக்கு சிறையில் கொடுக்கப்பட்ட உணவில் டாய்லெட் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் திரவம் கலக்கப்பட்டதாக இம்ரான் கான் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

அரசு ரகசியங்களை வெளியிட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதே போல பரிசுப்பொருள் தொடர்பான தோஷகானா வழக்கில் அவருக்கும் அவரது மனைவி புஸ்ரா பீவிக்கும் 14 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம்.இந்த சூழலில், தனது மனைவி புஸ்ரா பீவிக்கு சிறையில் கொடுக்கப்பட்ட உணவில் டாய்லெட்டை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் திரவம் கலக்கப்பட்டதாக இம்ரான் கான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஊழல் தொடர்பான வழக்கு விசாரணையின் போது நீதிபதி நஸீர் ஜாவேத் ராணாவிடம் இதனை தெரிவித்த இம்ரான் கான், தனது மனைவிக்கு இதனால் வயிற்றுப் பிரச்சினையுடன் கடும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது மனைவிக்கு இஸ்லாமாபாத்தில் உள்ள சர்வதேச மருத்துவமனையில் பரிசோதனை நடத்த சிறை நிர்வாகம் மறுப்பதாக இம்ரான் கான் கூறியதையடுத்து, புஸ்ரா பீவிக்கு முறையான மருத்துவ பரிசோதனை நடத்துமாறு சிறை நிர்வாகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக கடந்த ஏப்.15ஆம் தேதியன்று, தனது உணவில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்ய உத்தரவிடுமாறு இஸ்லாமாத் நீதிமன்றத்தில் புஸ்ரா பீவி முறையீடு செய்திருந்தார். தனக்கு நெஞ்செரிச்சல் மற்றும் தொண்டை, வாய் பகுதிகளில் வலி இருப்பதாவும் தனது மனுவில் புஸ்ரா பீவி குறிப்பிட்டிருந்தார்.