பாரிஸ் கட்டடம் ஒன்றிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் வெளியேற்றம்

20 0

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு சுமார் 3 மாதங்களே உள்ள நிலையில் அலுவலக கட்டடம் ஒன்றிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பாரிஸுக்கு தென் புறமாக கைவிடப்பட்ட அலுவலகக் கட்டடம் ஒன்றை ஆக்கிரமித்திருந்த புலம்பெயர்ந்தோரையே பிரெஞ்சு அதிகாரிகள் புதனன்று வெளியேற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கு முன்னர் நகர் சிறப்பாக இருக்கின்றது எனக் காட்டுவதற்காக அதிகாரிகள் முயற்சிப்பதாக தொண்டு நிறுவனங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

பாரிஸின் தென் பகுதியில் உள்ள புறநகர் விட்ரி-சூர்- சியேன் என்ற இடத்தில் உள்ள கைவிடப்பட்ட கட்டடத்தல் தங்கியிருந்த புலம்பெயர்ந்த மக்களே பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா தொடங்குவதற்கு முன்னர் (100 நாட்களுக்கு முன்பு) அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரான்ஸின் தென் மேற்கு பகுதியில் உள்ள மத்திய நகரான ஓர்லியன்ஸ் அல்லது போர்டெக்ஸுக்கு பஸ் வண்டிகளில் புலம்பெயர்ந்தோரை ஏறுமாறு அதிகாரிகள் உத்திரவிட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைவிடப்பட்ட கட்டடத்தில் சுமார் 450 புலம்பெயர்ந்தோர் வசித்து வந்ததாக அங்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளைப் பார்வையிட்ட அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும் வீடுகள் கிடைக்கும்வரை காத்திருந்தனர்.

அந்த கட்டடத்திலிருந்து வெளியேறுமாறு இந்த வார முற்பகுதியில் அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த உத்தரவுக்கு அமைய சிலர் வெளியேறத் தீர்மானித்தனர்.

ஆனால் சுமார் 300 பேர் வரை தொடர்ந்தும் தங்கியிருந்தனர். அவர்கள் அனைவரும் கலகம் அடக்கும் சீரூடை அணிந்த பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் தங்களது பைகள், சூட்கேஸ்கள் அல்லது தள்ளுவண்டிகளுடன் அந்த இடத்தை விட்டு வேளியேறினர்.

ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை தருவதற்கு முன்னர் நகரை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொண்டு நிறுவனங்கள் குறிப்பிட்டன.

‘பாரிஸை அண்மித்த பகுதிகளில் தஞ்சம் அடைவதற்கான இடங்கள் இருக்கின்றபோதிலும் ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு முன்னர் அவர்களை தலைநகரிலிருந்து வெளியேற்றுவதில் அதிகாரிகள் குறியாக இருக்கின்றனர்’ என உலக டாக்டகர்கள் வைத்திய தொண்டு நிறுவன பிரதிநிதி போல் அலௌஸ் தெரிவித்தார்.

வெளியேற்றப்பட்டவர்களில் இளைஞர்களும், குழந்தைகளுடன் தாய்மார்களும் அடங்குகின்றனர். பிளாஸ்டிக் கோப்புறைகளில் ஆவணங்களை வைத்திருந்த அவர்கள், குடியேற்ற அதிகாரிகளிடம் தங்கள் நிலைமையை விளக்கினர்.

அந்த அதிகாரிகளில் பெண் அதிகாரி ஒருவர் ஓர் இளைஞனை நோக்கி, ‘பாரிஸ் மாத்திரம் பிரான்ஸ் அல்ல. பொர்டொக்ஸிலும் உங்களால் இதனைவிட சிறப்பாக இருக்கலாம்’ என கூறினார்.

எனினும் அந்த இளைஞன் தலைநகர் பிராந்தியத்தில் ஒரு பயிற்சி வகுப்பில் கற்றுவருவதாக கூறினார். இதனை அடுத்து அவர் மற்றொரு மேசைக்கு அனுப்பப்பட்டார், அங்கு அவரது சகா ஒருவர் பாரிஸுக்கு அருகில் தங்குமிடம் ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டிருந்தார் என வெளிநாட்டு ஊடக செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

புலம்பெயர்ந்தவர்களில் பலர் பாரிஸ் பகுதியை விட்டு வெளியேற விரும்பவில்லை என்று தெரிவித்தனர்.

சூடானைச் சேர்ந்த மேர்சி டேனியல் என்ற தாயார், அந்தக் கட்டடத்துக்கு சென்றதற்கான காரணத்தை விளக்கினார்.

‘வன்முறைகள் அதிகளவில் இடம்பெறுவதால் எனது குழந்தைகளை அருகிலுள்ள கட்டடத்துக்கு அனுப்பிவைத்தேன்’ என்றார்.

வேறு இடங்களுக்குச் செல்வது பற்றிய நிச்சயமற்ற தன்மையை வெளிப்படுத்திய பிறகு, அவள் குழந்தைகளைப் பார்க்கவில்லை. என்றாலும் பாரிஸின் புறநகரில் ஒரு ஹோட்டல் அறை அவருக்கு கிடைத்தது, ஆனால் சில நாட்களுக்கு மட்டுமே அவரால் அங்கிருக்க முடியும்.

அப்புறப்படுத்தப்பட்டவர்கள் பீதி அடைந்துள்ள நிலையில் பிரான்ஸின் புறநகர் பகுதிகளில் வாழ்ந்துவரும் மக்கள் புலம்பெயர்ந்தவர்கள்; தங்களது பிரதேசத்திற்கு வருவதை விரும்பவில்லை. அப் பிரதேசங்களில் உள்ள மேயர்களும் ஆத்திரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு முன்னர் இவ்வாறான இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.