இனவாதத்துக்கு விலை போனவர்களே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டுகின்றனர்

20 0

தென்னிலங்கையில் இருக்கும் சில இனவாத தலைவர்களுக்கு விலை போயுள்ளவர்களே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டி தூபமிட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்றையதினம் (19.04.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியாக ஒன்றிணைந்து ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை முன்நிறுத்தி தமிழ் மக்களின் முழுமையான வாக்குகளையும் அவருக்கு வழங்கினாலும் தமிழ் மக்களின் சார்பில் அவர் வெற்றிபெற்று ஜனாதிபதியாக வரமுடியாது.

அதனடிப்படையில் தமிழ் மக்களின் அரசியல் களத்தில் இருக்கும் சில சதியாளர்களின் திட்டமாகவே ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின் பொது வேட்பாளர் முன்மொழிவு இருக்கின்றது.

அதேவேளை அது தமிழ் மக்களின் நலன்சார்ந்தது அன்றி அரசியல் தீர்வுகளுக்கான வழியை காட்டும் ஒன்றாக ஒருபோதும் இருக்கப்போவதில்லை.

அத்துடன் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கான ஏதுநிலைகள் காணப்பட்டு வருகின்ற நிலையில் தமிழ் தேசியம் பேசும் அரசியல் தரப்பினரிடையே தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக பேசப்பட்டு வருகின்றன.அது மட்டுமல்லாது பல்வேறுபட்ட கருத்துக்களும் அவர்களால் கூறப்பட்டு வருகின்றன.

கடந்த காலங்களிலும் தமிழ் மக்களின் சார்பில் சிலர் போட்டியிட்டுள்ள வரலாறுகள் இருக்கின்றன.

இதேநேரம் 2010 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னரான ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டபோது புலிகளின் ஏற்பாட்டில் தெரிவுசெய்யப்பட்ட 22 உறுப்பினர்களும் இணைந்து தமிழ் மக்களை அழித்ததாக அவர்களாலேயே கூறப்பட்ட சரத் பொன்சேகாவுக்கு வாக்குகளை அளிகுமாறு தமிழ் மக்களிடம் கோரியிருந்தனர்.

குறிப்பாக யுத்தம் நிறைவுக்கு வந்து ஓராண்டுக்குள்ளேயே இதை அறிவித்திருந்தார்கள்.

கடந்த கால தேர்தல்களில்களின்போதும் தமிழ் அரசியல் கட்சிகளால் குறிப்பாக தமிழ் மக்களின் பிரதிநிதிதிகள் தாங்கள் தான் என கூறியவர்களால் சஜித் பிரேமதாச போன்றோருக்கும் ஆதரவுகள் கொடுக்கபட்டன.

அதுமாத்திரமின்றி இன்றைய ஜனாதிபதியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக பணப்பெட்டிகள் கைமாறிய கதைகளும் அனைவருக்கும் தெரிந்ததே.

இவ்வாறானவற்றை எல்லாம் செய்த இவர்கள் இன்று பொது வேட்பாளரை முன்னிறுத்துமாறு கூறுவதானது கடந்த காலங்களில் அந்த சூழ்நிலையில் மனநிலை எவ்வாறிருந்தது?

அல்லது அரசியல் நிர்வாக தெளிவற்ற நிலையிலிருந்தார்களா? அல்லாது நிர்வாக ஞானம் இல்லாதிருந்தார்களா? என்ற கேள்விகளை இன்று பொது வெளியில் தோற்றுவித்துள்ளது.

அந்தவகையில் இன்று இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுக்கும் நோக்கம் தென்னிலங்கையில் இருக்கும் சில இனவாத தலைவர்களுக்கு விலைபோய், அவர்களது பணப்பெட்டிகளுக்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கம் தரப்பினரே இந்த பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டி அதற்கு தூபமிட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

அந்தவகையில் இந்த பொது வேட்பாளர் விடையத்தில் தமிழ் மக்கள் ஏமாராது இருப்பது அவசியமாகும்.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடும் சூழ்நிலை இருக்குமாயின் அவர் அதிகளவான வாக்குகளை பெற்று வெற்றியீட்டுவதற்கான சூழ்நிலையும் காணப்படுகின்றது.

இவ்வாறான ஒரு நிலையில்தான் ரணிலின் வெற்றியை கேள்விக்குட்படுத்தும் செயற்பாட்டை நிறைவுசெய்யும் சதியாளர்களின் கையாளர்களாகவே இந்த பொது வேட்பாளர் விடயத்தை கையிலெடுத்துள்ள தமிழ் தரப்பினரது செயற்பாடு உள்ளது” என தெரிவித்துள்ளார்.