இணையத்தில் போலிப் பிரசாரம் முன்னெடுப்பு : மூவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு பணிப்பு

108 0

டிஜிட்டல் மற்றும்  ஒன்லைன்  ஊடாக  கடன் வழங்கும் நிதி நிறுவனத்தை அவமதிக்கும் வகையில் தவறான மற்றும் சட்டவிரோத கருத்துக்களை  இணையத்தில் வெளியிட்ட  மூன்று சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிராக  அத்தனகல்ல மாவட்ட நீதிமன்றத்தில் ஐந்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

டிஜிட்டல் ஆல்டர்நேட்டிவ் லெண்டிங் அசோசியேஷன் (DALA) சங்கத்தில் உள்ள நிறுவனங்களால் இந்த வழக்குப் பதியப்பட்டுள்ளதோடு வெயங்கொடை, கம்பளை மற்றும் மஹவயைச் சேர்ந்த மூவருக்கு எதிராகவே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

டலா நிறுவனத்தைச் சேர்ந்த ஏ வி பிஸினஸ் சொலூசன் கேஷ் (A V Business Solutions – CashX), பின்டெக் சொப்ட்வெயார் (Fintech Software Solutions – Loanme), செபர் சொலூசன் தனியார் நிறுவனம் – லோடஸ் கடன் (Zephyr Solutions (Pvt) Ltd.- Lotus Loan),ஒன்கிரடிட் (Oncredit) மற்றும் எஸ்.எப்.குரூப் (S F Group-Fino.lk)  என்பனவே இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளன.

பிரதிவாதிகளிடம் இருந்து 4250 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு அமுலில் உள்ள சட்டத்திற்கு அமைவாக ஒன்லைன் ஊடாக கடன் வழங்கும் மேற்படி நிறுவனங்களுக்கு எதிராக பேஸ்புக் மற்றும் சமூக ஊடகங்களில் பிரதிவாதிகள் பொய்யான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்களை  வெளியிட்டுள்ளதாக மனுக்களில் குறிப்பிடப்பட் டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு பிரதிவாதியிடம் இருந்தும் தலா 500 மில்லியன் ரூபா வீதம் கோரப்பட்டுள்ளதோடு இது வரை மேற்கொண்ட சேதத்திற்காக 350 மில்லியன் ரூபா  நஷ்ட ஈடு கோரப்பட்டுள்ளது. சுதத் பெரேரா சட்ட நிறுவனத்தின் ஊடாக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மனுதாரர்கள் போலந்து, கசகஸ்தான், யுக்ரேன், செக் குடியரசு, ரூமேனியா, ஸ்பெயின், மோல்டோவா, வியட்நாம், பிலிப்பைன்ஸ்,கென்யா, இந்தியா,மெக்சிக்கோ, நைஜீரியா, கொலம்பியா, மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளிலும் செயற்பட்டு வருவதோடு  சட்டரீதியாகச் செயற்படும் வர்த்தகத்திற்கு எதிராக சட்டவிரோதமாக திட்டமிட்டு பிரசாரம்  மேற்கொள்ளும் பிரதிவாதிகளுக்கு எதிராக தீர்ப்பு வழங்குமாறும் தொடர்ந்து செயற்பட பிரதிவாதிகளுக்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

மனுவை ஆராய்ந்த  அத்தனகல்ல மாவட்ட நீதவான் கேசர சமரதிவாகர, எதிர்வரும் 22 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.