பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் விமானப்படை வீரர் பலி

20 0

பாதுக்கை – அங்கமுவ பகுதியில் பொலிஸாருடன் இன்று திங்கட்கிழமை (8) காலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, பொலிஸ் வீதித் தடைக்கு அருகில், உத்தரவை மீறிசென்ற மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து பொலிஸார் பதிலுக்கு மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் இலங்கை விமானப்படை வீரர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஹொரணை – தல்கஹவில பகுதியில் குறித்த நபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவரை கொலை செய்தவர் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து இலங்கை விமானப்படையின் ஊடகப் பணிப்பாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவிக்கையில்,

இன்று காலை பாதுக்கையில், உள்ள பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகில் உள்ள விமானப்படையின் ரக்பி பகுதியில் கடமையில் இணைக்கப்பட்டிருந்த விமானப்படையின் கோப்ரல் தர வீரர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். ஆனாலும் அவர் இன்று கடமையில் இருக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து விமானப்படை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. விமானப் படை வீரர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அதற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.