வவுனியாவில் மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது

31 0

வவுனியா – சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலையில் தரம் ஒன்று மாணவனை தாக்கிய ஆசிரியை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்று (07.01.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா – சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 2 இல் கல்வி பயிலும் மாணவன் கடந்த 03ஆம் திகதியன்று பாடசாலை முடிந்து வீட்டிற்கு சென்ற நிலையில் மாணவனின் முகத்திலும், தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் மாணவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியை தாக்கியதாக தெரிவித்துள்ளான்.இதனை தொடர்ந்து, சிறுவனின் தந்தை குறித்த ஆசிரியருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிறுவனை தாக்கியதற்கான காரணம் என்ன மற்றும் காலிற்கு கீழ் அடித்து இருக்கலாமே என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த ஆசிரியை ‘உங்கள் மகனுக்கு அ, ஆ தெரியவில்லை என்றும் அதனாலேயே அடித்தேன் என்றும் அடிக்கும் போது சிறுவன் அங்கும் இங்கும் ஓடியதால் முகத்தில் அடிபட்டுவிட்டது என்றும் கூறியுள்ளதுடன், அடிக்காமல் கொஞ்சுவதா’ எனவும் கேட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, கோபமடைந்த பெற்றோர் காயமடைந்த மாணவனை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை வழங்கியுள்ளதுடன், பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்துள்ளனர்.இந்நிலையில், தாக்குதல் இடம்பெற்று நான்கு நாட்களின் பின் வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸாரால்  குறித்த ஆசிரியரை கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த ஆசிரியரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, இச் சம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவினர், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு பிரிவினர், வட மாகாண கல்வி திணைக்களத்தினர் மற்றும் வவுனியா வடக்கு கல்வி வலயத்தினர் ஆகியோரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.