இயற்கை சமநிலையினை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை நாங்கள் பேணவேண்டும்

11 0

இயற்கை சமநிலையினை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை நாங்கள் பேணவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை அழகையும் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துவரும் பகுதியாக காணப்படும் பகுதிகளையும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக பிரகடனம் செய்யும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் ஏத்தாளைக்குளம் பகுதியை மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது பாதுகாக்கப்பட்ட பகுதியாக பிரகடனப்படுத்தி அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (05) காலை நடைபெற்றது.

இலங்கைக்கு காலநிலை மாற்றம் ஏற்படும் காலத்தில் அதிகளவான வெளிநாட்டு பறவைகள் படையெக்கும் நிலையில் அவை இலங்கையின் பல பகுதிகளிலும் தங்கியிருந்து அனைவரையும் கவர்ந்துவருகின்றது.

இதன்கீழ் குருக்கள்மடம் ஏத்தாளைக்குளம் பகுதியில் அதிகளவான வெளிநாட்டு பறவைகள் காலத்திற்கு காலம் படையெடுத்துவருவதன் காரணமாக அப்பகுதி பறவைகள் சரணாலயமாக காணப்படுவதுடன் அவற்றினை பார்வையிட சுற்றுலாப்பயணிகள் வருகைதரும் நிலையும் காணப்படுகின்றது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கிழக்கு மாகாண உதவி ஆணையாளர் தம்பிக்க கருணாரத்ன தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம்,மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் ஜெநாத்,மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் செயலாளர் அறிவழகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஏத்தாளை பறவைகள் சரணாலயத்தில் இலங்கைக்கே உரித்தான 34இன பறவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் காலத்திற்கு காலம் வெளிநாட்டு பறவைகளும் இங்கு பெருமளவில் வந்துசெல்வதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.