கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் கடும் மழை

24 0

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையையடுத்து இன்று (22) கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் கடும் மழை பெய்துவருகிறது.

குறிப்பாக கொழும்பு நகரின் பல பகுதிகளில் கடும் மழை பெய்வதால் வெள்ள நீர் நிரம்பியுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 31ஆம் திகதி வரை மழை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தகக்கது.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றம் காரணமாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என இன்று வெள்ளிக்கிழமை (22) மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய இணைப்பாளர் சுப்பிரமணியம் ரமேஸ் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பல தடவை மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடய மழையோ பெய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வானிலை தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

சப்ரகமுவ மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் மேலான பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பனி மூட்டம் காணப்படும்.

அதேவேளை இடியுடன் கூடிய மழையின்போது பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இதேவேளை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புக்களை பொறுத்தளவில் திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு அம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடல் பரப்புக்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புக்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

நாட்டை சூழவுள்ள கடல் பரப்புக்களில் காற்றானது கிழக்கு அல்லது மாறுபட்ட திசையில் வீசுவதுடன் மணிக்கு 20 தொடக்கம் 30 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படும்.

புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்புக்களுக்கு அப்பாற்பட்ட கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது 40 தொடக்கம் 45 கிலோமீற்றர் வரை அவ்வப்போது அதிகரிக்கக்கூடும்.

புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையும் அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்பில் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்றார்.

இதேவேளை திடீர் காலநிலை மாற்றம் காரணமாக கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் நேற்று வியாழக்கிழமையில் இருந்து அவ்வப்போது மழை பெய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.