மீனவர் பிரச்சினை : தமிழ்நாடு,பாண்டிச்சேரி முதலமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை

16 0

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முதலமைச்சர்கள் இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் பிரச்சினைகள் தொடர்பில் என்னுடன்  கலந்துரையாடியுள்ளனர்.

முதலமைச்சர்களைச் சந்தித்து கலந்துரையாடுவது தொடர்பிலும் ஒரு சூழல் உருவாகி வருகின்றது. எனவே  வடக்கின் கடற்றொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில்  உரையாற்றும் போதே  இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் எல்லைத் தாண்டியதும், அத்துமீறியதும், தடைசெய்யப்பட்ட கடற்றொழில் உபகரணங்களைக் கொண்ட கடற்றொழில் முறைமையினாலும், பாதிக்கப்பட்டு வருகின்ற வடக்கு கடற்றொழிலாளர்களின் நிலைமைகளை உலகுக்கு எடுத்துக் காட்டும் வகையில் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்து வருகின்ற உண்ணாவிரதப் போராட்டமானது மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

இந்த விடயம் தொடர்பில்  சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். புதன்கிழமை (20) கூட யாழ்ப்பாணத்திலே மூன்று இந்திய இழுவை மடி வலைப் படகுகள் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னாரில் இரு படகுகள் பிடிக்கப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களின் கடற்றொழில் துறை சார்ந்த அமைச்சர்கள் இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் பிரச்சினைகள் தொடர்பில் என்னுடன்  கதைத்து வருகின்றனர்.

அதேபோல் இம் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களும் என்னுடன் தொடர்பு கொண்டு வருகின்றர். முதலமைச்சர்களைச் சந்தித்து கலந்துரையாடுவது தொடர்பிலும் ஒரு சூழல் உருவாகி வருகின்றது.

அவர்கள் இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் மூலமான பாதிப்புகளை உணர்ந்து கொண்டிருப்பதாகவே தெரிய வருகின்றது. எனவே, பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு சுமுகமான தீர்வினை எட்ட முடியும் என நான் எதிர்பார்க்கிறேன்.

இதேநேரம் வடக்கின் கடற்றொழிலாளர்களது உணர்வுகளை நான் எப்போதும் மதிப்பவன். அவர்களது போராட்டங்களை நான் விளங்கிக் கொள்கின்றேன்.

அவர்களது போராட்டங்கள் சிறந்த பயன்களைத் தந்திருப்பதாகவே நான் கருதுகின்றேன். தற்போதே அவர்களது உண்ணாவிரதப் போராட்டமும் வெற்றி கண்டிருக்கிறது. எனவே, உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு நான் அவர்களிடம்  கேட்டுக் கொள்கின்றேன்  என்றார்.