மனித நேய மக்கள் கூட்டணி தேர்தலை இலக்காகக் கொண்டதல்ல – பிரபா கணேஷன்

22 0

மனித நேய மக்கள் கூட்டணி தேர்தலை இலக்காகக் கொண்டதல்ல. தேர்தல் காலங்களில் மாத்திரம் தோன்றி பின்னர் காணாமல் போய்விடும் கூட்டணிகளைப் போன்றல்லாமல், பாரிய அரசியல் சக்தியாக எமது கூட்டணி உருவெடுக்கும் என்று  ஜனநாயக மக்கள் காங்ரஸ் தலைவரும் மனித நேய மக்கள் கூட்டணியின் செயலாளருமான பிரபா கணேஷன் தெரிவித்தார்.

மனிதநேய மக்கள் கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு புதன்கிழமை (20) கொழும்பில் இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மனித நேய மக்கள் கூட்டணி தேர்தலை இலக்காகக் கொண்டதல்ல. ஊழல், மோசடியற்ற ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எமது இலக்காகும்.

தேர்தல் காலத்தில் பல கூட்டணிகள் உருவாக்கப்படுவதும், பின்னர் அவை பிளவுபட்டுச் செல்வதும் வழமையாகக் காணப்படுகிறது.

தேர்தல் காலங்களில் மாத்திரம் நானும் அரசியல்வாதிதான் எனக் கூறிக் கொண்டு சிலர் வருவதும், பின்னர் அவர்கள் காணாமல் போய் விடுவதுமே தற்போதுள்ள உண்மை நிலைவரமாகும். ஆனால் எமது கூட்டணி தேர்தல் காலங்களிலும் ஒன்று பட்டு செயற்படும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது.

பல முரண்பாடுகளை கடந்து இந்த கூட்டணியை நாம் உருவாக்கியிருக்கின்றோம். இக்கூட்டணி எதிர்காலத்தில் பலம் மிக்க அரசியல் சக்தியாக உருவெடுக்கும். பல முக்கிய தரப்பினர் எம்முடன் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன என்றார்.