சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு வந்தது!

15 0

சுங்கத் திணைக்கள அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சுங்க நிதியத்தை திறைசேரிக்கு உள்வாங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சுங்க அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சேவையில் இருந்து விலகியிருந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை அவர்கள் முன்னெடுத்திருந்தனர்.

இதன் காரணமாக சுமார் 4,500 கொள்கலன்கள் சுங்க பிரிவில் விடுவிக்கப்படாமல் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான பின்னணியில் இந்த விடயம் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் தலைமையில் நேற்று பிற்பகல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

சுங்க அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மற்றும் திறைசேரியின் அதிகாரிகள் இதில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இன்று முற்பகல் 9 மணிமுதல் வழமை போன்று தங்களது பணி முன்னெடுக்கப்படும் என சுங்க அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.