ஊடக பிரச்சார உத்தி: கூட்டணி கட்சிகளுடன் ஆலோசிக்கும் திமுக

14 0

ஆளும் திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவினர், பாஜகவினர், அதிமுக ஐடி பிரிவினர் பதிவிடும் சமூக வலைதள பதிவுகளுக்கு தொடர்ந்து பதிலடி தரும் விதமாக பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும் தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா திமுக கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து, அக்கட்சிகளின் தகவல் தொழில் நுட்ப அணியினரை ஒருங்கிணைத்து வருகிறார். நேற்று முன்தினம் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பேசினார்.

இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘‘நாடு காக்கும் ஒற்றை நோக்கம். அதற்கான செயல்பாடுகளின் திட்டம். ஆலோசிக்க தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுடன் சந்திப்பு நிகழ்ந்தது. நிறைவான உரையாடல்’’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த டி.ஆர்.பி.ராஜா, ‘‘தோழமை கட்சிகளின் இணையதள போராளிகளுடன் பேசியுள்ளோம். எதிர்தரப்பினர் எடுக்கும் ஆயுதத்தைவிட சிறந்த ஆயுதத்தை எடுக்க தயாராக உள்ளோம்’’ என்றார்