தமிழகத்தில் விரைவில் ராகுல், கார்கே சூறாவளி பிரச்சாரம்

14 0

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழா மற்றும் இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது.

அதில் பங்கேற்க செல்லும்போது, சென்னை விமான நிலையம் வந்த செய்தியாளர்களிடம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று கூறியதாவது:

தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் கடந்த மக்களவைத் தேர்தலை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக, காங்கிரஸ் இடம்பெற்றுள்ள இண்டியா கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் விரைவில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.

அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மும்பையில் இன்று அவர்களை சந்தித்து பயண திட்டங்களை வகுக்க இருக்கிறோம்.

மக்களவைத் தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. 7 கட்டமாக நடக்கும் தேர்தலில், முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடக்கப் போகிறது என்பது, மோடிக்கு எப்படி தெரிந்தது? அதனால் தான் அவர் தமிழ்நாட்டில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தாரா? இவ்வாறு அவர் கூறினார். அப்போது கட்சியின் மாநில பொருளாளர் ரூபி மனோகர் உடனிருந்தார்.